யாழ் தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள அன்னமார் கோவிலில் நடந்த பொங்கல் திருவிழாவின் போது அம்மன் உருக் கொண்டு ஆடியவர் அக் கோவில் பகுதியில் உள்ள மிக ஆழமான 60 அடிக் கிணற்றினுள் இறங்கி மரணமாகியுள்ளார்.
குறித்த நபர் அம்மன் அருள் வந்து கிணற்றுக்குள் இறங்க முற்பட்ட போது அங்கிருந்த பக்தர்கள் அவரைத் தடுத்துள்ளனர்.
இருந்தும் குறித்த நபர் அக் கிணற்றினுள் கயிற்றின் உதவியில் இறங்கி சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த பக்தர்கள் பெருமுயற்சி செய்து அவரை மீட்க முற்பட்டு கிணற்றினுள் இறங்க முற்பட்ட போது, ஆழமான கிணற்றில் ஒட்சிசன் இல்லாததால் அவர்கள் மூச்சுத் திணறியதால் வெளியேறினர்.
இதனையடுத்து யாழ் மாநகரசபை தீயணைப்பு படையினருக்கு அறிவித்து அவர்களும் அங்கு விரைந்து வந்த போதும் கிணற்றின் அடிவரை செல்ல முடியாததால் முயற்சி தோல்வியடைந்தது.
உடனடியாக காங்கேசன்துறை கடற்படையினருக்கு அறிவித்த போது அவர்கள் அங்கு வந்து ஒட்சிசன் வாயுவின் உதவியுடன் கிணற்றில் இறங்கி குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அம்மன் கலையாடி கிணற்றில் இறங்கி உயிரிழந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.