யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாடு இன்றுவரை நீடித்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். என அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேவேளை இந்த மோதலை தனது தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த பொதுமகன் ஒருவரை சிங்கள மாணவர்கள் சிலர் அவதானித்து இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பொது மகனை சிறிது தூரம் அழைத்துச் சென்ற இராணுவத்தினர், அவரைக் கடுமையாக அச்சுறுத்தியதுடன் தொலைபேசியைப் பறித்தெடுத்து ஒளிப்படங்கள் அனைத்தையும் அழித்துள்ளனர். என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வராச்சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் இடம்பெற்றதால், அதில் தலையீடு செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.