ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரெயில்களில் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ‘செல்பி’ எடுப்பவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு விபத்துக்குள்ளாகி பலியாகும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெயில் விபத்துகளில் 30 சதவீதம் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் கவனக்குறைவால் நிகழ்வதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மையில் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்று செல்பி எடுத்த பார்த்தசாரதி என்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பூந்தமல்லியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரும் மின்சார ரெயிலில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்து இறந்தார்.
இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் நடைபெறாமல் தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ரெயில்கள், ரெயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகியவைகளில் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கு 3 மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே போலீசார் கூறியுள்ளனர்.