கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் கூறுகிறார்.
மகளுக்கு பரிசோதனை
தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் புதின், பெரும் அளவில் இந்த தடுப்பு மருந்து விரைவில் உற்பத்தி செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அச்சம் தெரிவிக்கும் மேற்குலகம்
தடுப்பு மருந்து தயாரிப்பதில் ரஷ்யாவின் வேகத்திற்கு மேற்குலக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே ஆய்வாளர்கள் சில நடைமுறைகளைப் புறந்தள்ளி இவ்வளவு வேகம் காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று முன்னதாக ரஷ்யா தெரிவித்து இருந்தது.
கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா
முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ கூறியதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்து இருந்தது.
உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.
ஷ்யாவில் இதுவரை 890,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14973 பேர் பலியாகி உள்ளனர்.