ராசிபுரத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டுக்கொன்ற டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் காலனி மாரப்பன் தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தில் (வயது 40). இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சங்கீதா (35) என்ற மனைவியும் ராமகிருஷ்ணன் (15), கோபாலகிருஷ்ணன் (11) என்கிற இரு மகன்களும் உள்ளனர். டிரைவர் செந்திலுக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக வடுகத்தில் உள்ள சங்கீதாவின் பெற்றோருடன், செந்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற செந்தில் அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ராமகிருஷ்ணனுடன் ராசிபுரத்திற்கு வந்துள்ளார்.
சிகிச்சை பெற்ற பின்னர் ராசிபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டிலேயே மூவரும் தங்கிவிட்டனர். இந்த நிலையில் நேற்று மூவரும் வீட்டின் மொட்டைமாடியில் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12.30 மணி அளவில் செந்தில் அவரது மனைவி சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு செந்திலின் மகன் ராமகிருஷ்ணன் எழுந்து பார்த்தபோது சங்கீதா தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அருகில் கையில் கல்லுடன் ராமகிருஷ்ணன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ராமகிருஷ்ணனை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செந்திலை ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் செந்தில் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதித்து இருந்ததும், விரைவில் தான் இறந்துவிடுவேன் என குடும்பத்தாரிடம் கூறி மனவருத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது. அதனால் மனநலம் பாதித்து செந்தில் தனது மனைவி சங்கீதாவை கொலை செய்திருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சங்கீதா நேற்று இரவு தனது தாய் ஜெயலட்சுமியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது தனது கணவர் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது.
எனினும் சிகிச்சை பெறும் செந்திலிடம் முழு விசாரணை நடத்தினால் மட்டுமே கொலை குறித்த தகவல் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.