ஆகஸ்ட் 20 திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள்.
ராஜீவ்காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு அன்று வெறுமனே ஏழு வயது. அது அவரது தாயின் படுகொலையுடன் ஆரம்பமாகி அவரது படுகொலையுடன் முடிவடைந்தது.
ஆனால் அந்தக் காலப்பகுதிக்குள் அவர் பல விடயங்களை பாரம்பரிய அரசியல் வர்க்கத்திலிருந்து மாறுபட்ட விதத்தில் செய்திருந்தார்.
1991ம்ஆண்டு மே 21ம் திகதி அவர் விடுதலைப்புலிகளின் குண்டிற்கு பலியாகாவிட்டால், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் வேறு மாதிரியானதாக காணப்பட்டிருக்கும்.
நீனாகோபாலின் சமீபத்திய நூல் ‘‘ராஜீவ்காந்தியின் படுகொலை’’ தனது பிரதமரை இந்தியா பாதுகாக்க தவறிய துயரமான சம்பவத்தை மீண்டும் எங்களிற்கு வலியுறுத்தியுள்ளது.
1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றியதன் காரணமாக இலங்கை எனக்கு எப்போதும் நெருக்கமான விடயமாகவே உள்ளது.
குறிப்பிட்ட நூலை எழுதிய நீனாகோபால் ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து என்னுடன் பல மணிநேரம் உரையாடியிருந்தார்.
நான் இன்னும் அந்த நூலை வாசிக்கவில்லை. ஆனால் வெளியான அதன் சில பகுதிகளில் நான் தெரிவித்த விடயங்கள் இடம்பெற்றிருப்பதை வாசித்துள்ளேன்.
ராஜீவ்காந்தி 1984 முதல் 89 வரை இந்திய பிரதமராக பணியாற்றியவர், அவரிற்கு அரசியல் அனுபவம் கிடையாது. ஆனால் ஓரு விடயத்தை செய்துமுடிப்பதில் அவருக்குள்ள களிப்பும், முடிவுகளை காண்பதற்காக அவர் உணர்ச்சிவசப்படக்கூடியவராக காணப்பட்டதும், பொறுமையற்றவராக காணப்பட்டதும் அவரை பொதுமக்களிற்கு நெருக்கமாக்கியது.
இந்தியா எதிர்கொண்டிருந்த நீண்டகால மோதல்களிற்கு தனது ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைகாண விரும்பினார். சில முயற்சிகள் வெற்றியளித்தபோதிலும் பல முயற்சிகள் எதிர்பார்த்த முடிவைகொண்டிருக்கவில்லை.
ராஜீவ்காந்தி ஆட்சிக்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இந்திய உறவுகள் பாரிய குழப்பத்தில் காணப்பட்டன.
1983ம் ஆண்டின் இனக்கலவரத்தை தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களிற்கும் தமிழ் பிரிவினைவாத குழுக்களிற்கும் அவர் அடைக்கலம் வழங்கினார்.
தமிழ் கிளர்ச்சிக்குழுக்கள் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானவர்களாக மாறினர். இதன் காரணமாக இலங்கை வேறுவழியின்றி இந்தியாவின் ஆலோசனையை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் ஓரளவு சுயாட்சியை பெறுவதை உறுதிசெய்வதற்காக ராஜீவ்காந்தி முன்னால் இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தனவுடன் ஓப்பந்தத்தில்கைச்சாத்திட்டார்.
தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படும் என இந்தியா இலங்கைக்கு உத்தரவாதமும் அளித்திருந்தது.
குறிப்பிட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது, அதாவது பிரச்சினைகளிற்கு துரிதவேகத்தில் தீர்வைகாணும் ராஜீவ்காந்தியின் பாணியில் அது காணப்பட்டது. ஆனால் அதன்போது அரசியல்ஞானம் காணப்படவில்லை.
இந்திய- இலங்கை உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதால் ராஜீவ்காந்தியின் உயிர் பறிக்கப்பட்ட அதேவேளை, குறிப்பிட்ட உடன்படிக்கை அதன் தர்க்கரீதியான முடிவை காண்பதற்கு இரு நாடுகளும் அனுமதிக்காததை நான் அராஜகம் என்றே கருதுகிறேன்.
தமிழ்நாட்டின் நீலகிரியில் விடுதலைப்புலிகளின் தொடர்பாடல்களை பதிவு செய்துகொண்டிருந்தவேளையே அது இடம்பெற்றது.
விடுதலைப்புலிகளின் உரையாடல்களில் காணப்பட்ட விடயங்கள் அதிர்ச்சியை அளித்தன.
அவை யாழ்ப்பாணத்தமிழில் காணப்பட்டன. அந்த உரையாடல் ராஜீவ்காந்தியை “டம்” பண்ணுமாறு உத்தரவிட்டது. மிகச்சரியான சொல் எனக்கு தற்போது நினைவில் இல்லாதபோதிலும், அந்த சூழல் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
“டம்பிங்” என்பது விடுதலைப்புலிகள் படுகொலைக்கு பயன்படுத்தும் வார்த்தை. விடுதலைப்புலிகள் தங்கள் உரையாடல்களின்போது பயன்படுத்தும் மொழி குறித்து எனக்கு பரிச்சயமிருந்தது.
அந்த உரையாடல் குறித்து உறுதிசெய்வதற்காக யாழ்ப்பாண மொழிப்பாவனையை நன்கு அறிந்த தொலைத்தொடர்பு சாதனை பயன்படுத்தும் ஓருவரை நான் தொடர்புகொண்டேன்.
அவர் அது ராஜீவ்காந்தியை கொல்வதற்கான உத்தரவு தான் என உறுதியாக தெரிவித்தித்தார். அதிர்ச்சியடைந்த நான் இந்திய அமைதிப்படையின் தளபதிக்கு இது குறித்து அறிவித்தேன்.
அவர் என்னை இந்தவிடயத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரின் அந்த உத்தரவு சரியானது, ஏனெனில் எங்களிற்கு அவ்வேளை செயற்படுவதற்கான தலைமைப்பீடமொன்று காணப்படவில்லை, அந்த அதிகாரி அந்த உரையாடலின் பதிவை சென்னை புலனாய்வு பிரிவினரிடம் வழங்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்.
நான் ஐபி அலுவலகத்திற்கு சென்று அதன் இயக்குநரை சந்தித்தேன்.
அவர் பல வருடங்களாக எனது சிறந்த நண்பர்,அவர் அந்த உரையாடலை செவிமடுத்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார்-அவர் என்னை பார்த்து ‘‘கேர்ணல் இது முற்றிலும் சாகச முயற்சி ,ராஜீவ்காந்தி எப்போது எப்படி கொல்லப்படுவார் என்பதை அவர்கள் விசேடமாக குறிப்பிடவில்லையே?
அவர்களால் ராஜீவ்காந்தியை கொல்ல முடியும் என நான் கருதவில்லை, அவர்கள் ஏன் கொல்லவேண்டும்?’’ என தெரிவித்தார். எனக்கு அந்த உரையாடல் ஏமாற்றமளித்தது.
ஆனால் அவர் தெரிவிப்பதிலும் சில உண்மைகள் இருப்பது போல தோன்றியது , நான் குழப்பமடைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினேன்.
பின்னர் நான் இலங்கையில் உள்ள எனது நண்பரை தொடர்புகொண்டேன் அவர் ராஜீவ்காந்தி கொல்லப்படுவார்- அதுதான் பிரபாகரன் பாணி என்றார்.
அதன் பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு – ராஜீவ்காந்தியின் படுகொலை எனக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நான் குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். எனக்கு கிடைத்த தகவல்களை தீவிரமாக ஆராய்ந்திருந்தால் அந்த படுகொலையை தடுத்திருக்கலாம் என நான்கருதினேன்,
ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் உருவாக்கப்பட்ட கார்த்திகேயன் தலைமையிலான விசேட விசாரணை குழுவிடம் நான் நாங்கள் இடைமறித்துக்கேட்ட அந்த தகவல் குறித்தும், அதன் ஓலிப்பதிவு நாடா ஐபியிடம் வழங்கப்பட்டது குறித்தும் தெரிவித்தேன்.
அவர் இந்திய கடற்படையினரும் விடுதலைப்புலிகளின் தகவல்களை இடைமறித்தவேளை அவ்வாறான தகவல்களை கேட்டதாக தெரிவித்தார்.