வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மாமனார், 3 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவி ஆகியோருக்கு பிணை வழங்க இன்றும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த இரு சந்தேக நபர்கள் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் முன்வைக்கப்ப்ட்ட பிணை கோரிக்கைகளையே இன்றைய தினம் நீதிவான் நிராகரித்தார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா, ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய நால்வர் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5 ஆவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் குறித்த மனு நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது 2 ஆம் , 3 ஆம் சந்தேக நபர்கள் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
இவ்வழக்கு மீள செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.