சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள ‘லிங்கா’ படத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி விநியோகஸ்தர்கள், படத்தின் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம், கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் இந்த படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிட்டது.
லிங்கா படத்தின் விநியோக உரிமையை பெறுவதில் விநியோகஸ்தர்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டதோடு, பல கோடி ரூபாய் கொடுத்து படத்தின் விநியோக உரிமையை பெற்றனர். ஆனால், விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி வருமானம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் திருச்சி, தஞ்சாவூர், தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி தியாகராய நகரில் உள்ள விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, மெரினா பிக்சர்ஸ் உரிமையாளர் சிங்காரவேலன் கூறுகையில், “விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பாலாவிஸ்வநாதனிடம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 50 திரையரங்கின் விநியோக உரிமையை ரூ.8 கோடிக்கு வாங்கினேன்.
ஆனால் எதிர்பார்த்தபடி லிங்கா படம் வசூலை தரவில்லை. இதனால் எனக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அவர்தான் பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
விஜய் பார்கவி என்டர்டயின்மென்ட் நிறுவன உரிமையாளர் பாலாவிஸ்வநாதன் கூறுகையில், ” லிங்கா படம் வெளிவருவதற்கு முன் ரஜினிகாந்த் எங்களிடம், படையப்பா படத்தை விட லிங்கா 10 மடங்கு பெரிய படம்.
இந்த படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறினார். இதை நம்பி நான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திரைப்பட விநியோக உரிமையை ரூ.14 கோடிக்கு வாங்கினேன்.
அதேபோல் என் தலைமையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சார்பில் ரூ.8 கோடியும், தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர் சார்பில் ரூ.6 கோடியும் மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர் சார்பில் ரூ.14 கோடி என மொத்த பணத்தையும் லிங்கா படம் வெளிவருவதற்கு முன் வேந்தர் மூவீஸ் உரிமையாளர் எஸ்.மதனிடம் கொடுத்து லிங்கா படத்திற்கான உரிமையை பெற்றோம். ஆனால் எதிர்பார்த்தபடி லிங்கா படம் ஓடவில்லை.
எனக்கு மட்டும் இந்த படத்தின் மூலம் ரூ.8 கோடியும், வட ஆற்காடு, தென் ஆற்காடு விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும், திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தருக்கு ரூ.4 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் ரஜினி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை” என்றார்
ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது ஐ டிரைலர்
19-12-2014
விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மட்டும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஐ டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே ‘ஐ’ டீசரை 90 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.