பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படு கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் ஊடாக விஷேட தகவல்கள் சில கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த தகவல்களின் ஊடாக மிக முக்கியமான விசாரணை ஒன்று இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் அறிவித்தது.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இதனை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க நீதிவானுக்கு தெரிவித்தார்.
நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது, வஸீம் படுகொலை தொடர்பிலான சாட்சிகளை அழித்தமை தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த அனுர சேனநாயக்கவை சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில் ஆஜர் செய்தனர்.
இதன்போது நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் மேலதிக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தனர்.
குறித்த அறிக்கையில், வஸீம் தாஜுதீனின் படுகொலை இடம்பெற்ற தினம் மற்றும் அதனை தொடர்ந்த தினம் ஆகியவற்றுக்குரிய, ஜனாதிபதி செயலகத்தின் வாகன உள், வெளி செல்லும்போது பதிவு செய்யப்படும் வாகன பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்படடுள்ளமை தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக அறிவித்தனர்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் இருவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
இந் நிலையில் நீதிவானிடம் விசாரணை தொடர்பில் தெளிவுபடுத்திய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, ‘ வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் ஊடாக எமக்கு சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் மிக சூட்சுமமாக விசாரணை செய்கிறார்கள். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட வஸீம் தாஜுதீனுக்கு சொந்தமான கடனட்டையை அவரது கொலைக்கு பின்னர் யாரேனும் பயன்படுத்தினரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதனைவிட மரணம் தொடர்பில் ஆரம்பத்தில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்திருந்த கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனத்த சமரசேகரவுக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை முன்னெடுத்துள்ள விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதியாகும்போது நிறைவு செய்வதாக எனக்கு அறிவித்துள்ளனர்’ என அறிவித்தார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அதுவரை முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.