• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி?
• இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம்
• புலிகளின் ஆயுத ஒப்படைப்பு
• விடுதலைப்புலிகள் பற்றி இந்திய இராணுவம் தவறாக எடைபோட்டமை!
தொடர்ந்து….
தெற்கில் ஜே வி பி இனரின் அச்சுறுத்தல்கள் காரணமாக நிலமைகள் மோசமடைந்த வேளையில், வடக்கிலும் அதே நிலமைகளே காணப்பட்டன. அதாவது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான தேனிலவு நீடிக்கவில்லை.
சமாதானப் படையினரின் வருகையானது விடுதலைப்புலிகளின் சுதந்திரமான செயற்பாடுகளுக்குத் தடையாக இருப்பதை அவர்கள் உணரத் தொடங்கினர்.
பொதுவாகவே தமிழ்ச் சமூகம் மூத்த தலைமுறையினருக்கும், கல்வியாளர்களுக்கும் உயர்ந்த கௌரவத்தினை வழங்கும் பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.
விடுதலைப்புலிகளின் தோற்றத்தின் பின்னர் கல்வி அறிவு குறைந்த இளைஞர் சமூகத்தின் பிரிவினர் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தமையால் அதிகாரம் மிக்கவர்களாகவும், சமூகத்தின் மத்தியில் சற்று வித்தியாசமான மரியாதையையும் பெற்றனர்.
இந்திய ராணுவத்தின் வருகை அவர்களது அதிகார மமதைக்கு சவாலாகவும், மக்களின் முன்னிலையில் ஆயுதங்கள் அற்று நிர்வாணமாக நிற்கும் உணர்வு நிலையிலும் காணப்பட்டனர்.
இது பல நாடுகளில் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி கல்வி அறிவில்லாதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அவ் அதிகாரத்தை என்ன விலை கொடுத்தேனும் தொடர்ந்து வைத்திருக்க மேலும் வன்முறையைத் தொடர்கின்றனர்.
இலங்கை – இந்திய ஒப்பந்த நடைமுறை புலிகளை அங்கீகரிக்கவில்லை. ஓப்பந்தத்தின் ஒரு பகுதியினராகக் கருதப்படவில்லை. இது தமக்கு எதிரான ஒரு முயற்சி எனப் பிரபாகரன் உணர்ந்தார்.
தமிழ்ச் சமூகத்தை தனது கிடுக்குப் பிடியில் வைத்திருந்த அவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் சுதுமலை மைதானத்தில் ஆற்றிய உரை இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது தம்மீது திணிக்கப்பட்ட ஒன்றாக உணர்ந்ததை வெளிப்படுத்தியது.
அடுத்த முக்கிய அம்சம் எதுவெனில் இலங்கை ராணுவத்திடம் ஆயுதங்களைக் கையளிக்கும்படி வற்புறுத்தியது தம்மை எதிரியிடம் அவமானப்படுத்துவதாகவும், அந்த ஆயுதங்களைப் பறித்ததும் தமிழ்ப் பிரதேசங்களிலே இலங்கை ராணுவம் தடையின்றி ரோந்து செல்ல வாய்ப்பளிக்கும் எனவும் கருதினர்.
அத்துடன் இந்தியப் படையினரின் உத்தரவுகளுக்குப் பணிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதும், அவர்களைச் சுதந்திரமாக தேடுதல்களை மேற்கொள்ள அனுமதிப்பதும் மிகவும் கசப்பான, விழுங்க முடியாத மாத்திரைகளாக அமைந்தன. இவைகளே இந்திய ராணுவத்தினருக்கு எதிரான கோபங்களை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தன.
இந்தியப் படையினரின் கையில் இலங்கை ராணுவம்
இந்திய ராணுவத்தின் அவமானங்களுக்குப் புலிகள் மட்டுமல்ல, இலங்கை ராணுவமும் தனது நாட்டிற்குள் முகம் கொடுத்தது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவம் முகாம்களுக்குள் இருக்க வேண்டுமென வரையறுக்கப்பட்டிருந்தது.
வேறு இடங்களுக்குச் செல்வதாயின் சமாதானப் படையினரின் வழிநடத்தல்களுக்குப் பணிந்து செயற்பட வேண்டும். இந்த உத்தரவை இந்திய ராணுவத்தின் எத்தகைய தரத்திலுள்ளவர் வழங்கினாலும் பணிந்து செயற்பட வேண்டும்.
இதன் காரணமாக நாம் இந்தியப் படையினரின் உத்தரவுகளுடன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது தெருத் தடைகள் இந்தியப் படையினரால் போடப்பட்டிருக்கும்.
இத் தடைகளில் நாம் மிகவும் அதிக நேரம் காக்க வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பல தருணங்களில் இந்திய ஜவான்கள் ‘ பீடி’ யைப் புகைத்தவாறு எமது வாகனங்களை நிறுத்தி ஏறுவார்கள்.
பின்னர் ‘ போ’ எனப் பலத்த சத்தத்தில் உத்தரவிடுவார்கள். சில சமயங்களில் ‘நிறுத்து’ என்பார்கள். நிறுத்தியதும் அவர்கள் வரும் வரை காத்திருக்க வைத்தார்கள்.
மிகவும் கட்டுப்பாடான பயிற்சிகளைப் பெற்ற எமக்கு இவை மிகவும் எரிச்சலை ஊட்டின. சமாதானத்திற்காக இவற்றை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை குறித்து வருத்தப்பட்டதுண்டு.
இவற்றால் கோபமடைந்த சக ராணுவத்தினர் பொறுமை இழந்த வேளையிலும் நாம் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயற்பட்டோம்.
வடக்கு, கிழக்கில் செயற்பட்ட இந்திய சமாதானப் படையினர் குறித்துச் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
இந்தியாவில் ராணுவத்தினருக்கான சில பயிற்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்திய ராணுவம் மிகவும் சிறந்த, ஒழுக்கமுள்ள படை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
முதலாம், இரண்டாம் உலகப் போரில் பலர் தமது உயிர்களை இழந்துள்ளனர். மிகவும் கல்வி அறிவும், நெறியும் உடைய அதிகாரிகள் பலர் உள்ளனர்.
ராணுவ தந்திரங்களில் சிறந்த வல்லமை உடையவர்கள். பாரிய சனத் தொகை உள்ள நாட்டில் ராணுவத்தில் இணைவது என்பதும், பதவி உயர்வு பெறுவதும் பலத்த போட்டியுடையதாக இருக்கும்.
பதவி உயர்வை அடைவதற்கு அங்கு ஒழுங்கு முறை உண்டு. இதனால் மிகவும் உயர்ந்த தகுதியுடையவர்களே உயர் பதவியை அடைய முடியும்.
மரபுவழிப் போரில் குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆபத்துகள் காரணமாக சிறந்த பயிற்சி பெற்ற அவர்கள் புலிகளுடன் வித்தியாசமான போருக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
அதாவது மீண்டும் சிறுவர் பாடசாலைக்குப் போவதற்கு ஒப்பான நிலை ஏற்பட்டது.
தீக்சித் தனது நூலில் பிரதமர் ராஜிவ் காந்தி இந்திய பிரதம தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் ‘விடுதலைப் புலிகள் இந்தியப் படையுடன் மோத எண்ணினால் அவர்களை முறியடித்து ஆயுதங்களைப் பறிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?’ என வினவினார். அதற்கு அவ் ராணுவத் தளபதி சொற்ப நாட்கள் போதும் எனப் பதிலளித்தார்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளிலும், அதன் தலைமையின் வல்லமையிலும் அனுபவம் பெற்ற எமக்கு இந்திய ராணுவம் தவறாக எடைபோட்டுள்ளதையும், புலிகளின் சிந்தனைப் பலத்தை அவர்கள் உணரவில்லை என்பதனையும் நாம் புரிந்து கொண்டோம்.
புலிகளின் தந்திரங்களும், செயற்பாடுகளும் அவர்களின் சொந்தக் கண்டுபிடிப்புகளாகும். இதனைப் புரிந்து கொள்ள எமக்குப் பல காலம் எடுத்தது.
இப் பிரச்சனையில் இந்திய ராணுவத்திற்கும், எமக்கும் இடையேயுள்ள வேறுபாடு எதுவெனில் நாம் ஒருபோதும் புலிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை.
ஆனால் அவர்கள் மிகவும் எளிமையாக எடுத்துக் கொண்டார்கள். இதன் காரணமாகவே இந்திய ராணுவத்திற்கும், புலிகளுக்குமிடையேயான நல்லுறவு நீடிக்கப் போவதில்லை என்பதை நாம் ஏற்கெனவே நம்பினோம்.
இந்திய சமாதானப் படையினர் இந்திய தென் பிராந்திய கமான்டர் லெப்ரினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங், மேஜர் ஜெனரல் கர்க்கிராத் சிங் என்போர் தலைமையில் வந்திருந்தது.
புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த போது இந்தியப் படையினரின் சார்பில் இவர்களும், இலங்கை அரசின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சேபால அட்டிகல மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி, புலிகளின் உதவித் தலைவர் மாத்தையா, யோகி எனப்படும் யோகரத்தினம், அன்ரன் பாலசிங்கம் என்போர் புலிகள் தரப்பிலும் பிரசன்னமாக இருந்தனர்.
ஆயுதக் கையளிப்பின் போது ஓர் வாகனம் நிறைந்த பாவனைக்குதவாத பழைய ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தனர். ஓப்பந்தத்தின் பிரகாரம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கப் போவதில்லை என்பதை இவை உணர்த்தின.
இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் இந்திய ராணுவத் தளபதி திபீந்தர் சிங் இடம் ‘புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்காவிடில் என்ன நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்வீர்களா?’ எனக் கேட்ட போது ‘பலாத்காரமாக களைவோம்’ என்றார்.
ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்த வேளையில் வடக்கு, கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகம் தொடர்பான விவகாரம் பேசப்பட்டது. ஜே. என். தீக்சித் இந்திய அதிகாரிகளின் உதவியுடன் 12 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகம் அமைக்க எண்ணியபோது அதில் 6 உறுப்பினர்கள் தம்மால் நியமிக்கப்பட வேண்டுமென புலிகள் வற்புறுத்தினர்.
அதில் மிகுதி 6 உறுப்பினர்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 2 பேரும், முஸ்லீம் சமூகத்தின் சார்பில் 2 பேரும், அடுத்த 2 பேர் சிங்கள சமூகத்தின் சார்பிலும் நியமிக்கப்பட வேண்டுமென புலிகள் கோரினர்.
இச் சபையின் பிரதான நிர்வாகஸ்தர் யார்? என்பதைத் தீர்மானிப்பதில் புலிகளுக்கும், அரசிற்குமிடையே இழுபறி ஏற்பட்டது. மூவரைப் புலிகள் சிபார்சு செய்தனர்.
இம் மூவரில் முன்னாள் யாழ். மாநகர ஆணையாளர் சிவஞானத்தை ஜே ஆர் சிபார்சு செய்ய, முன்னாள் கிழக்கு மாகாண அரச அதிபர் என். பத்மநாதனை நியமிக்க வேண்டுமென புலிகள் கூறினர்.
ஆனால் ஜே ஆர் அதில் விடாப்பிடியாக தூதுவர் தீக்சித் பத்மநாதனின் நியமனத்தை வற்புறுத்திய போதிலும் இறுதியில் அது சாத்தியப்படாததால் இடைக்கால நிர்வாக யோசனை குப்பைத் தொட்டிக்குள் சென்றது.
இப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த வேளையில் ஏற்பட்ட நிலமைகள் புலிகள் போரைத் தேர்ந்தெடுத்துள்ளமையை உணர முடிந்தது.
திலீபன் என்ற மூத்த தலைவர்களில் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இறங்கினார். நோயாளியான அவர் தாமாக விரும்பி உண்ணாவிரதத்தில் இறங்கினாரா? அல்லது மரணத்தை அண்மித்துள்ள அவரை தனது நோக்கத்திற்காக உண்ணாவிரதத்தை நோக்கிப் பிரபாகரன் தள்ளினாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக சபைக்குப் புலிகளின் பிரதிநிதியை நியமிக்க மறுத்ததும், திலீபனின் மரணமும் தமக்கு உரிய கௌரவத்தை இந்திய தரப்பினர் தரவில்லை என புலிகள் கருதினர். இதனால் இந்திய சமாதானப் படையினருக்கு எதிராக செயற்படுமாறு புலிகள் மக்களைத் தூண்டினர்.
இவ் வேளையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக அமைச்சர்கள் பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலி என்போர் செயற்பட்ட போதிலும் அமைச்சர் காமினி திஸநாயக்கா ஜே ஆரிற்கு ஆதரவாக இருந்தார்.
இவ் வேளையைப் பயன்படுத்திப் புலிகள் பல ஆயுதங்களைக் கப்பலில் இலங்கையை நோக்கி ஏற்றினர். இக் கப்பலை இலங்கைக் கடற்படை நடுக்கடலில் தடுத்த போது அக் கப்பலில் ‘புலேந்திரன்’ தலைமையில் 17 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பயணம் செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவியதும் தூதுவர். தீக்சித், லலித் அத்துலத் முதலி ஆகியோர் துரிதமாக தத்தமது நோக்கங்களை நிறைவேற்றப் பணியில் இறங்கினர்.
( மிகுதி தொடரும் )
தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்