தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக ழ்வு வடக்கில் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது. யாழ்ப்பா ணம், நல்லூரில் அமைந் துள்ள அன்னாரது நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வும் ஏனைய மாவட்டங்கள் தோறும் பல இடங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
திலீபன் உயிரிழந்த நேரமான காலை 10.45 மணிக்கு உயிர் நீத்த இடத்தில் ஒன்று கூடிய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் அவருடைய நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது அஞ்சலியை செலுத்தினர்.
இந்தப் பிரதான நிகழ்வு யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர மேயர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
பெருமளவானோர் நினைவுத் தூபிக்கு அருகில் ஒன்றுகூடியதுடன் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். யாழ்.மாநகர மேயர் உட்பட அரசியல் பிரமுகர்கள் திலீபனின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்குக் காவடி எடுத்துவந்த இளைஞர்கள் அவர்களது அஞ்சலியை செலுத்தியிருந்தனர். இதனைவிட பலர் காவடிகளையும் எடுத்திருந்தனர். இந்த நிகழ்வானது அங்கிருந்த மக்களை கண்ணீர் சிந்த வைத்திருந்தது.
இதேபோன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்றுக் காலை பதில் துணைவேந்தரும் விஞ்ஞான பீடாதிபதியுடமான கலாநிதி பிறின்ஸ் ஜெயதேவன் பொதுச் சுடரினை ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்.
இதனையடுத்து நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.
வடமராட்சி பிரதேசத்தில் பருத்தித்துறை, சுப்பர்மடம், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் நேற்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பருத்தித்துறை யாழ்ப்பானம் பிரதான வீதியில் மருதடி முருகன் கோவில் பின்வீதிபக்கமாக அமைக்கப்பட்டிருந்த திலீபனின் தூபியில் நேற்றுக்காலை பெருந்திரளானோர் ஒன்று கூடி அஞ்சலித்தனர்.
மறைந்த போராளி புரட்சித்தம்பியின் தாயாரான அ.தவமணி முதல் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றினார்.
தொடர்ந்து அஞ்சலிக்காக வந்திருந்த ஈழமக்கள் புரட்சி விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பி.யுமான சுரேஸ் பிரமசந்திரன், பருத்தித்துறை நகரசபை தலைவர் யோ.இருதராஜா, உபதலைவி திருமதி மதனி, பருத்திதுறை பிரதேசசபைத்தலைவர் அ.சா.அரியகுமார், உபதலைவர் கு.தினேஸ் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பருத்தித்துறை நகரசபை, பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபைகளை சோ்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலை கூட்டனி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை சூடியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பருத்தித்துறை சுப்பர் மடத்தில் பருத்தித்துறை வல்வெட்டி துறை வீதியில் கடற்கரை ஓரத்தில் இப்பகுதிக்யைச் சோ்ந்த பொதுமக்களால் விசேட பந்தல் அமைக்கப்பட்டு அதற்குள் மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டு திலீபனும் உருவப்படமும் வைக்கப்பட்டு அப்பகுதி மக்களால் நேற்று நாள் முழுவதும் அஞ்சலி செய்யப்பட்டது.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் விசேட பந்தல் அமைக்கப்பட்டு திலீபனின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.இ. சிவாஜிலிங்கம், ச.சுகிர்தன், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோ. கருனானந்தராஜா மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார். திலீபனின் நினைவாக ஆதி கோவிலடி முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுரேன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மன்னாரில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நேற்றுக் காலை பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் உட்பட மதத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், வடமாகாண அமைச்சர் ஜி.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.பிறிமூஸ்சிராய்வா, பா.டெனீஸ்வரன், மன்னார் நகர முதல்வர் அன்டனி டேவிட்சன் உட்பட நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவிலும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் திலீபனின் நினைவேந்தல் நடைபெற்றது. இதிலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.