வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விரு கூட்டங்களிலேயே, வடக்கு மற்றும் கிழக்கை மீளவும் இணைப்பது தொடர்பிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டு, இணைப்புக்குச் சாதகமான தீர்மானமும் எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இரண்டு தீர்மானங்களும் தற்போதைக்கு தேவையானதா?
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, முக்கியமான மூன்று விடயங்கள், ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாக, தமிழ் பேசும் மக்களின் தாய் மொழி நிலைக்கவேண்டும், அவர்களின் கலாசாரம் மேம்படுத்தப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத் தொடரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்;பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன.
இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரகடனம், இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும்.
மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் சமூகத்துக்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், சம்மேளத்தின் செயலாளர் பொறியலாளர் எம்.எம்.எம்.நளீம், பொருளாளர் எம்.ஏ.ஜி.எம்.சபீர் உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல பிரிவுசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் பேசிய போது, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் மட்டுமே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும், தமிழ் மக்களின் மொழி, கலை, கலாசாரங்களைப் பேணி பாதுகாக்கவும் முடியும் என்று கூறினார்.
இலங்கை: வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடரப் பிரகடனம் வெளியீடு
இலங்கையில் உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும். என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஓன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் ஒன்றுகூடி தங்களின் இந்தப் பிரகடனத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களிடம் முன் வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஒற்றையாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு, தற்போதுள்ள ஜனாதிபதி முறை ஆகியனவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டாம்
“வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அந்த இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மை இனமாக்கும். இன ரீதியான அநீதிக்குள்ளாக்கும்.
முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளனர். மட்டுமன்றி சுய நிர்ணய உரித்துடையவர்களாகவும் இருப்பதால் அவர்களை ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது” என்று இந்த பிரகடனம் கூறுகின்றது.
சமஷ்டி முஸ்லிம்களுக்கு பாதகமானது
”முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிர், உடமைகளின் இழப்புக்களின் அடிப்படையில் ஒற்றையாட்சியே அவர்கள் விரும்புகின்றார்கள். சமஷ்டியை தங்களுக்கு பாதகமாகவே கருகின்றார்கள்” என அதிகாரப் பரவலாக்க முறை தொடர்பாக அந்த பிரகடனம் குறிப்பிடுகின்றது.
ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும்
தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என தனது பிரகடனத்தில் வலியுறுத்தியுள்ள கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்
” தமிழ் – முஸ்லிம் விவகாரங்களை கையாளக் கூடிய அதிகாரம் கொண்ட இரு துனை ஜனாதிபதிகள் இடம்பெறுவதை அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்” என்ற யோசனையையும் முன் வைத்துள்ளது.