உத்தியோகபூர்வ அமர்விற்கு விசேட ஏற்பாடு
முதலாவது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடை பெறவுள்ளது. அந்த வகையில் இன்றுடன் வடக்கு மாகாண சபை கலைகின்றது. அதன்படி முதலாவது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வானது இன்று காலை 9 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகும்.
முதலாவது வடக்கு மாகாண சபையின்134 ஆவது அமர்வானது இறுதி அமர்வாக சம்பிரதாயபூர்வமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. சபையின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக அவைத் தலைவரின் அறிவித்தலை தொடர்ந்து வட மாகாண கீதம் முன்மொழிவும் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் கடந்த 5 ஆண்டுகளாக செய்யப்பட்ட திட்டங்கள் தடைகள் தொடர்பாக விசேட உரையினை ஆற்றவுள்ளார்.
மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தமது இறுதி அமர்வில் 3 தொடக்கம் 5 நிமிடங்கள் தமது மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட நன்மை தீமைகள் தொடர்பாக உரையாற்றவுள்ளார்கள்.
இன்றைய சம்பிரதாயபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்புக்களை விடுவிக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை முதலாவது வடக்கு மாகாண சபையின் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில்
2013ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்23 ஆம் திகதி தொடக்கம் இன்று 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்23 ஆம் திகதி வரை 134 வரை இடம்பெற்ற அமர்வுகளில் இரண்டு அமர்வுகளுக்கே நான் தலைமை தாங்கவில்லை. ஏனைய சபை அமர்வுக்கு நான் தலைமை தாங்கியுள்ளேன்.
இந்த சபை அமர்வு காலத்தில் மாகாண சபை முழுமையாக செயற்படவில்லை என்றோ நிதி திரும்பிவிட்டது என்ற கருத்தை ஆரம்பம் தொட்டு மறுதலித்துத்தான் நான் வந்துள்ளேன். சில தீர்மானங்கள் முக்கியமானவை. மக்களுடைய கருத்துக்கள் கூறியுள்ளோம்.
அதேநேரம் இவை எல்லாமே செயற்பாட்டுக்குள் வந்துள்ளக என்று கூறமுடியாது. மக்களின் கருத்துக்கள் தேவைகள் , உணர்வுகள், அபிலாசைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்இந்த சபை நிறைவேற்றியுள்ளது என்பது என்னுடைய கருத்தாகும் .
மகாண சபை எதையும் சாதிக்கவில்லை என்ற யாரும் கூறினால் அது அவர்களின் தவறாகும். என்னுடைய செயற்பாடுகள் தொடர்பில் என்னுடைய கருத்துக்களை படிக்காமல் அவதானிக்காமல் கருத்துக்களை யாரும் கூறுவார்களாயின் அது அவர்களின் தவறு அதேநேரம் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி விட்டொம் என்று சொல்வதற்கு நான் தயாராக இல்லை.
நான் எப்பொழுதுமே செய்யலாம் செய்யவில்லை செய்யவிடவில்லை என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். இந்தக் காலம் முடிந்தபின்னர் குறிப்பாக மாகாண சபை அமைந்த காலம் முதல் இன்று வரை யாராவது எதையும் பேசினாலும்கூட மாகாண நிர்வாகத்தை தெரியாதவர்கள் அவைத் தலைவருடைய செயற்பாடுகள் தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசியிருந்தால் அதைப்பற்றிக் கவலை இல்லை.
நான் நானாவே சுய கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டே செயற்பட்டுள்ளேன்.அந்தத் தடை இன்றுடன் நீங்கும் என்று நினைக்கிறே ன் இனி அரசியல் ரீதியான கருத்துக்களை கூறுவதற்கு சுதந்திரம் கிடைக்கும் அதற்கான எந்தத் தடையும் இல்லை என்றே நினைக்கின்றேன்.தடை வந்தாலும் அதனையும் எதிர்கொள்வேன் என்றார்.