அண்மையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிகம் பேசப்படும் ஒரு தலைவராக மாறியுள்ளார்.
இந்நிலையில், எழுக தமிழ் பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல் வாதிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பாக அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினையும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் முன்வைத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது.
எனினும், ஒரு புறத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்கதையாகியுள்ளது. அவர்கள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்தும் வருகின்றனர்.
இதனை வலியுறுத்தியே எழுக தமிழ் பேரணி இடம்பெற்றது. குறித்த பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சரை ஒரு இனவாதியாகவே தென்னிலங்கையில் பார்க்கப்படுகின்றார்.
அந்த வகையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது.
குறித்த பாடலில் சமஷ்டியை கோரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் மற்றும் பைத்தியம் என அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புலி உருவ பொம்மை ஒன்றை காட்சிப்படுத்தி, அதனை தனது செல்ல பிராணியாக வடக்கு முதல்வர் வளர்ப்பதைப் போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டை பிரிக்க முயற்சிக்கின்ற விக்கியை, நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என அந்த பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைய நாட்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குறித்த பாடல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, நல்லிணக்கம் தொடர்பில் பேசிவரும் நல்லாட்சி அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றது.? இப்படியான செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிவகுக்காது என்பதற்கு என்ன நிச்சயம்..?
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளுக்கு நல்லாட்சி அரசு என்ன பதில் கூறப்போகின்றது…? என்பதே தற்போதைய கேள்வி..!