உயர்தரம் படித்துக் கொண்டிருந்த என்னு டைய சகோதரர்கள் 3 பேரை முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாமிலிருந்து வந்த படையினரே மட்டக்களப்பு சித்தாண்டி முரு கன் கோயிலடியில் வைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என சகோதரர்களை தொலைத்த சகோதரியொருவர் கண்ணீர் மல்க நேற்று சாட்சியமளித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வியாழக்கிழமை முதல் விசாரணைகளை நடத்தி வரும் காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்நிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்றன. கோரளைப்பற்று தெற்கு மற்றும் கோரளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் நடைபெற்றன.
தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
1990ஆம் ஆண்டு யுலை மாத இறுதியில் மட்டக்களப்பின் முறக்கொட்டான் சேனையில் எங்களது காணி அடங்கலான பிரதேசத்தில் இராணுவம் முகாமிட்டது.
அதனால் அப்போது நாங்கள் கொஞ்சம் தூரத்திலுள்ள சித்தாண்டி முருகன் கோவிலுக்கு பாதுகாப்புக்காகச் சென்று தங்கினோம். எங்களைப் போல் அதிகமானவர்கள் வந்தமையினால் அது அகதி முகாமாக இயங்கியது.
அந்த முகாம் ஆரம்பித்து சில நாட்களில் ஆகஸ்ட் 02ஆம்திகதி வாகனங்களில் வந்த இராணுவத்தினர் அப்பிரதேசத்தைச் சுற்றி வளைத்து அங்கு கொண்டு வரப்பட்டிருந்த முகமூடி பொம்மையாக இருந்தவரிடம் ஒவ்வொருவராக்காட்டி எனது அண்ணன் வீரபத்திரர் பொன்னுத்துரை, வீரபத்திரர் அருள்நாதன், வீரபத்திரர் சசிதரன் ஆகியோர் உட்பட 17பேரை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
இராணுவத்தின் காலில் விழுந்து எங்களது சகோதரங்கள் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என அழுதோம். விசாரணை இருப்பதாகவும் முடிந்தபின் விடுவதாகவும் கடுமையாகச் சொன்னார்கள்.
அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட சிறைச்சாலைகள் உட்பட பல இடங்களிலும் எங்களது சகோதரங்களைத் தேடி அலைந்திருக்கிறோம். எந்தப்பிரயோசனமும் இல்லை. எங்கு சென்று கேட்டாலும் இல்லை என்றே சொல்கிறார்கள்.
அண்மையில் முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமிலிருந்து எங்களது வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் உங்களது சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது பிறப்புச் சான்றிதழ்களைத் தாருங்கள் என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களது சான்றிதழ்கள் எல்லாம் வன்செயலில் அழிந்து போய்விட்டன என்றே சொன்னோம்.
எனது மூத்த சகோதரன் தேநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மற்றைய சகோதரர்கள் உயர்தரமும், சாதாரண தரமும் படித்துக் கொண்டிருந்தார்கள். எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே இருந்து கொண்டிருக்கிறோம்.
அம்மா இப்போதும் என்பிள்ளை வருவான் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் ஒரு ஆசிரியையாக இருந்த போதும் இப்போது விடுமுறை எடுத்து இங்கு வந்திருக்கிறேன். இப்போதும் முறக்கொட்டான்கேனை இராணுவ முகாம் இருக்கிறது, எங்களது சகோதரங்கள் தான் இல்லை. அவர்கள் வீட்டுக்குத்திரும்புவதையே இப்போதும் எதிர்பார்க்கிறோம்.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 64 விண்ணப்பங்களும், கோரளைப்பற்று வடக்கில் 214 விண்ணப்பங்களும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 55 பேரது விடயங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நேற்று முன்தினம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற விசாரணைகளில் 54 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், 39 பேர் சாட்சியமளித்திருந்தனர் அதே ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 424 முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அன்றைய தினம் புதிதாக 250 பேர் முறைப்பாடுகளைப் பதிவும் செய்தனர்.
நேற்றைய அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்துகோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
அதே நேரம் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று வடக்கு பிர தேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொண்டனர்.
ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை காலை முதல் மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வாகும்.
வட்டுக்கோட்டையில் சுற்றிவளைப்பு: பதற்றம்
22-04-2014
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுவருகின்றது. இதனால் அப்பகுதியில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்; வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தை, மாவடி, மூளாய், பொன்னாலை போன்ற பிரதேசங்களிலேயே சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
இந்தச் சோதனை நடவடிக்கைக்காக மக்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லையென்றும் அவ்வாறு வெளியே செல்பவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
கிளிநொச்சி,தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் நேற்றிரவு தொடக்கம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி இளைஞன் கைது
22-0-2014
மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது..
கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்து நேற்று (21) தலைமன்னார் பொலவிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.நாங்கள் விசாரனைகளின் பின் சனிக்கிழமை(22) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.