சென்னை மயிலாப்பூரில், ஓர் இளம்பெண்ணிடம் ‘சிகிச்சை’ என்ற பெயரில் அத்துமீறிய 64 வயதாகும் டாக்டர் ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரது செல்போனில், மூன்று வீடியோக்கள் இருந்ததை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சிவகுருநாதன். இவர், மயிலாப்பூரில் கிளினிக் நடத்திவருகிறார். கைராசியான டாக்டர் என்ற பெயர் பெற்ற இவரது கிளினிக்கில் எப்போதும் கடும் கூட்டம் இருக்கும்.
இந்த நிலையில்தான், டாக்டர் சிவகுருநாதன் மீது மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ‘நெஞ்சு வலி என்று சிகிச்சைக்குச் சென்றேன். அங்கு டாக்டர், என்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார், டாக்டர் சிவகுருநாதனைக் கைதுசெய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சிவகுருநாதன், பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நீரிழிவு நோயாளிகளுக்கும் ஸ்பெஷலாக சிகிச்சை அளித்துவருகிறார்.
இதனால், சிவகுருநாதனிடம் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர். அவர்களிடம் எல்லாம் குறைவாகத்தான் கட்டணம் வசூலித்துள்ளார். இதனால், அவரது கிளினிக்கிற்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
எல்லோரிடமும் சகஜமாகவும் அன்பாகவும் பழகும் குணமுடைய சிவகுருநாதனின் புகழ், மயிலாப்பூர் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
இந்த நிலையில், சம்பவத்தன்று திருவள்ளூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மயிலாப்பூரில் உள்ள தாய் வீட்டுக்குவந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர், சிவகுருநாதன் கிளினிக்கிற்கு வந்திருக்கிறார்.
அவரிடம், சிகிச்சை என்ற பெயரில் சிவகுருநாதன் அத்துமீறி நடந்துள்ளார். இதை, இன்னொரு நோயாளி பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வெளியில் வந்த இளம்பெண்ணிடம், உள்ளே நடந்த சம்பவத்தையும், டாக்டர் வீடியோ எடுத்த தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறிப்போன அந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை எங்களிடம் தெரிவித்தார். அதன்பேரில் டாக்டரிடம் விசாரித்தோம். அவரது செல்போன்களையும் பறிமுதல்செய்து ஆய்வுசெய்தோம்.
அப்போது, மூன்று ஆபாச வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்தன. டாக்டரிடம் விசாரித்தபோது, முதலில் அவர் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை.
அப்போது, வீடியோவை அவரிடம் காண்பித்தபோது, அவர் முகம் மாறியது. இதையடுத்து. டாக்டர் சிவகுருநாதனைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளோம்.
போலீஸ் நிலையத்தில் சிவகுருநாதனிடம் விசாரணை நடந்தபோது, அவரது மனைவி வந்தார். அவர், கதறி அழுதார். அதைப் பார்த்த சிவகுருநாதன், எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தார். சிவகுருநாதன், வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு மயிலாப்பூரில் கடந்த 16 ஆண்டுகளாக கிளினிக் நடத்திவந்துள்ளார்.
அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். இதில் இரண்டு பேர் டாக்டர்கள். ஒருவர் இன்ஜினீயர். அவர்கள் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் உள்ளனர்.
டாக்டரின் செல்போனில் உள்ள வீடியோக்கள், புகைப்படங்களில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள்குறித்து டாக்டரிடம் விசாரித்துள்ளோம்.
சிகிச்சைக்கு வந்த பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் பல ஆண்டுகளாக வீடியோ எடுத்து அதை தனிமையில் ரசித்துப் பார்த்துவந்துள்ளதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அவரது லைசென்ஸை ரத்துசெய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைசெய்யவுள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களிடம் புகார் கொடுத்த திருவள்ளூர் பெண்ணின் வீடியோ, டாக்டரின் செல்போனில் இல்லை.
அந்தப் பெண்ணை பரிசோதித்தபோது, அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவல், சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்ததும் அது அழிக்கப்பட்டு, மெமரி கார்டும் தூக்கி எரியப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் எங்களிடம் தெரிவித்தார். அந்த மெமரி கார்டைத் தேடினோம். ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை”என்றார்.
எப்படி வீடியோ எடுப்பார் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, “சிகிச்சைக்கு வரும் பெண்களின் குடும்பப் பின்னணியை டாக்டர் கேட்டறிந்துகொள்வார்.
அதன்பிறகு, யாருக்கும் தெரியாமல் இளம்பெண்ணைப் பரிசோதிக்கும்போது, தன்னுடைய மொபைல் போனில் வீடியோவை ஆன் செய்து வைத்துவிடுவார்.
அவர் அளிக்கும் ஒவ்வொரு சிகிச்சையும் அதில் பதிவாகிவிடும். நோயாளி வெளியில் சென்றதும் அந்த வீடியோவை தன்னுடைய போனில் சேவ் செய்துவைத்துவிடுவார்.
டாக்டரின் போனிலிருந்த இந்த வீடியோக்கள் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.
டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண்களில் பலர், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பீதியில் உள்ளனர். மயிலாப்பூரில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.