சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த தர்மாராவ் (55) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகள் ஜான்சிராணி (27) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் ஈஸ்வரராவுடன் ஏற்பட்ட தகராறில் மகள் பல்லவி (3) உடன் ஈஞ்சம்பாக்கம் வந்துள்ளார்.
ஜான்சிராணியின் கணவர் ஈஸ்வரராவ், ஈஞ்சம்பாக்கம் வந்து மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்த போது ஜான்சிராணி மறுத்து விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தர்மாராவ் மகள், மருமகன் இருவரையும் சமாதானம் செய்து தூங்கச் சென்றுள்ளார்.
கணவரால் மனமுடைந்த ஜான்சிராணி, நள்ளிரவில் தனது மகள் பல்லவியை அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்று அங்கிருந்த கிணற்றில் வீசியுள்ளார்.
தண்ணீரில் மூழ்கிய சிறுமி பல்லவி, அலறி துடித்து பரிதாபமாக இறந்த நிலையில், ஜான்சிராணியும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
காலை கண் விழித்த தர்மாராவ் தனது மகள் மற்றும் பேத்தி இருவரும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடத் தொடங்கியுள்ளார்.
பின்னர் தோட்டத்தில் சென்று பார்த்த போது கிணற்றில் தாய்-மகள் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவல் அறிந்த நீலாங்கரை பொலிசார், கிணற்றில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து ஜான்சிராணியின் கணவர் ஈஸ்வரராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.