நெல்லை, -கள்ளக்காதலனுக்கு தன்னை திருமணம் செய்துவைக்க தாய் திட்டமிட்டதையறிந்த சிறுமி ஆசிரியை உதவியுடன் தப்பினார்.
அவரை போலீசார் மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், கூலி தொழிலாளி.
இவரது மனைவி லதா (35, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்களுக்கு 13 வயதில் மகள் மற்றும் 11 வயதில் மகன் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
மோகன் கூலி வேலைக்கு சரிவர செல்லாமல் அடிக்கடி நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். இதனால் குடும்ப செலவுக்காக லதா பலரிடம் கடன் வாங்கினார்.
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய நிலையில் மகனை அங்குள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்த்தார். லதாவிற்கு புளியங்குடியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது.
கணவர், குழந்தைகள் இல்லாத நேரத்தில் அவர் அடிக்கடி லதாவின் வீட்டிற்கு சென்று நெருக்கமாக இருந்து வந்தார்.
அந்த நபருக்கு லதாவின் மகள் மீதும் ஆசை ஏற்பட்டது. அவ்வப்போது சிறுமியை அவர் சில்மிஷம் செய்து வந்தார்.
இதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததுடன் தனது தாயிடம் கூறினார். ஆனால், அவர் இதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைத்தால் லதாவின் கடன் முழுவதையும் அடைப்பதாகவும், ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்றும் அவரது கள்ளக்காதலன் ஆசை வார்த்தை கூறினார்.
இதற்கு லதாவும் சம்மதித்தார். கடந்த வாரம் லதா மற்றும் அவரது மகளை மதுரைக்கு அந்த நபர் அழைத்துச் சென்று அங்குள்ள விடுதியில் தங்கினார்.
அப்போது லதாவின் கண் முன்பே சிறுமியிடம் அவர் தவறாக நடக்க முயன்றார்.
சிறுமி கூச்சலிட்டதால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. பின்னர் அங்கிருந்து அவர்களை கடையநல்லூருக்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து சிறுமி தனது தம்பியுடன் சுரண்டையில் உள்ள பள்ளி ஆசிரியை வீட்டிற்கு சென்று நடந்த விவரங்களை கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனே சைல்டு லைன் 1098க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இருவரையும் கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
நெல்லை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலர் சந்திராவிடம் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை இருவரையும் ஒப்படைத்தார்.
பின்னர் சிறுவனும், சிறுமியும் நெல்லை சந்திப்பு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இரு குழந்தைகளும் நேற்று குழந்தைகள் நல சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம் இரு குழந்தைகளையும் சரணாலய பாதுகாப்பில் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவும், சிறுமியின் தாய் லதா மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.