வீதியால் சென்ற பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முற்பட்ட இளைஞன் வயோதிபரின் துணிச்சலான செயற்பாட்டினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ். அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அரியாலை ஆசீர்வாதப்பர் வீதியால் உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
இதன் பொழுது அப்பெண் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். அப்பொழுது வீட்டுக்கு வெளியில் வெயிலின் கொடுமை தாங்க முடியாத நிலையில் கதிரையில் அமர்ந்திருந்த வயோதிபர் ஒருவர் தான் அமர்ந்திருந்த கதிரையை மோட்டார் சைக்கிளை நோக்கி வீசி எறிந்துள்ளார்.
அதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்துள்ளனர். இதன்பொழுது ஒரு இளைஞனை அப்பகுதியில் ஒன்று கூடிய மக்கள் பிடித்துள்ளனர். மற்றைய இளைஞர் தப்பியோடியுள்ளார்.
அவ்வாறு தப்பியோடிய இளைஞனையும் நாயன்மார்கட்டுப் பகுதியில் இளைஞர்கள் பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த இரு இளைஞர்களும் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியைச் சேர்ந்த 18, 19 வயதுடைய சகோதரர்கள் என அடயாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.