தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சாலை விபத்து அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதது என்று பல்வேறு காரணங்களால் விபத்து சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அரசு, சமூக ஆர்வலர்கள் என்று பலரும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை. இதற்கு உதாரணமான ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அங்கு மோகனூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், தனது இரு சக்கர வாகனத்தில் இளம்பெண் ஒருவர் சாலையைக் கடக்கிறார். அவர் இரு புறங்களும் பார்த்துவிட்டு மெதுவாகத்தான் செல்கிறார்.
ஆனால், அந்த நேரத்தில் அங்கு அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று, அந்த இளம் பெண்ணின் வண்டி மீது மோதுகிறது. இதில் வாகனத்துடன் அந்தப் பெண் தூக்கி வீசப்படுகிறார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பதறியடித்து வந்து அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் பிரியா என்று தெரியவந்துள்ளது.
கார் மோதியதில் பிரியாவுக்கு 5 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சி.சி.டி.வி-யில் பதிவான காட்சி மூலம் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை 5.16 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து மோகனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.