மாங்குளம் ஏ9 வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது வவுனியா, ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்களில் இராணுவ புலனாய்வு துறையைச் சேர்ந்த 29 வயதுடைய ஆர்.எம்.ரத்நாயக்க என்பவர் உயிரிழந்துள்ளளார்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் இரண்டு அம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மருத்துவமனை தகவல்களின்படி, அங்கு 12 பேர் படுகாயமடைந்த நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஆறுமாத குழந்தை உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், புளியங்குளம், ஓமந்தை மருத்துவமனைகளுக்கும் காயமடைந்தவர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.