வவுனியா – திருநாவற்குளம் பகுதியில், வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர், வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதியன்று, மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று, இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில், அவ்விளைஞன் படுகாயமடைந்திருந்தார்.
எனினும், வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் அஞ்சியதால், பொலிஸாரால் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று (07), குறித்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து, விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பிரதிபொலிஸ்மா அதிபருக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து இன்று (08) அதிகாலை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.