வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கமுவ பகுதியைச் சேந்த 25 வயதுடைய மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழந்த இளைஞன் வவுனியா, மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணியில் நீண்டகாலமாக பணியாற்றி வந்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரத கடவையில் படுத்துறங்கியிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது சடலம் புகையிரதக் கடவைக்கு அருகே காணப்படுவதோடு, சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் அப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? போன்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.