யாழ்ப்பாணம் கைதடி தெற்கு ஊரியான் பிரதேசத்தில் மாற்று வலுவுள்ள ஒரு பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்த 4 எதிரிகளுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் புதனன்று தலா 15 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த எதிரிகள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நட்டயீடு செலுத்தத் தவறும்பட்சத்தில் 2 வருட சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் தண்டப் பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் எச்சரிக்கை செய்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி கைதடி தெற்கு ஊரியான் பிரதேசத்தில் வாய்பேச முடியாத, காது கேளாத பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்ததாக தம்பிராசா ரஜனிகாந்த், பரமு தினேஸ்குமார், சிவலை கனகரட்னம், நாகராஜா ரகுநாதன் ஆகிய நான்கு பேருக்கு எதிராக கூட்டுப்பாலியல் வல்றுறவு குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்டமா அதிபரினால், யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், கடந்த 21.07.2009 ஆம் திகதி முன்னிரவு 7.30 மணியளவில் இந்த 4 எதிரிகளும் தன்னை தூக்கிச் சென்ற இந்த 4 எதிரிகளும், அருகில் உள்ள பற்றைக்காட்டில் தன்னைக் கற்பழித்ததாகவும் அதன் பின்னர் வீட்டின் பின்னால் உள்ள பாழடைந்த மண்டபம் ஒன்றில் கொண்டு வந்து விட்டதாகவும் மறுநாள், 22.07.2009 ஆம் திகதி காலை உறவினர்கள் வந்து தன்னைக் கூட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
காது கேளாத வாய்பேசாத பெண்ணாக இருந்தாலும் ஓரளவு பேசக்கூடிய ஓரளவு காது கேட்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தப் பெண் நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்தபோது, கைதடி நவீல் பாடசாலையைச் சேர்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர் மூலம் அவருடைய சாட்சியம் மொழி பெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய பெயர் வயது, விலாசம் மற்றும் நான்கு எதிரிகளின் பெயர்கள் என்பவற்றை தனது வாயினால் நேரடியாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் நீதிமன்றத்தில் எதிர்களை தெளிவாக சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினார்.
தனது வாயைக் கட்டி, பற்றைகள் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும், அப்போது தனது கண்ணால் 4 எதிரிகளையும் கண்டதாகவும் அந்தப் பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அத்துடன் ஓவ்வொரு எதிரியினாலும் தனக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதை அந்தப் பெண் தனது சாட்சியத்தில் எடுத்துரைத்தார்.
உங்களைக் கட்டி இழுத்துச் சென்றவர்கள் யார் என நீதிமன்றம் அவரை வினவியபோது, ஓரளவு பேசக்கூடிய வல்லமை இருந்த காரணத்தினால், எதிரிகள் நால்வரையும், ரகு, ரஜனி, ராஜன், தினேஸ் என பெயர் குறிப்பிட்டு, தனது வாயினால் தெரிவித்ததுடன், அந்த நால்வரையும் நீதிமன்றத்தில் குறித்து அடையாளம் காட்டினார். .
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் கந்தையா ரட்னசிங்கம் தனது சாட்சியத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருடைய தொடையில் கீறல் காயம் காணப்பட்டதுடன், கன்னிச் சவ்வு கிழிந்து காணப்பட்டதாகவும், பாலியல் வல்லுறவு இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு எதிரிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், அவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைகளின் முடிவில், இந்தப் பெண்ணை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 எதிரிகளும் கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்துள்ளமை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச சட்டவாதி எண்பித்துள்ளார் என தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த எதிரிகளுக்கான தண்டனைத் தீர்ப்பின்போது, நீதிபதி இளஞ்செழியன் சில முக்கிய விடயங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர், பெண் வாய்பேச முடியாத காது கேளாத குறைபாடுடைய பெண்ணாவார். அவர் திருமணம் செய்யாதவர். குறைபாடுடைய இந்தப் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்துள்ளமை பாரதூரமான குற்றச் செயலாகும்.
இந்;த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகள் 4 பேரும், அவர் மீது கூட்டாகப் பாலியல் வல்லுறவு புரிந்து, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே நாசமாக்கியுள்ளனர்.
அத்துடன் அந்தப் பெண்ணின் கௌரவம், அவருடைய குடும்ப கௌரவம் என்பவற்றையும் சீரழித்துள்ளனர்.
ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மட்டும் வைத்து தீர்ப்பளிக்கப்படுமானால், அந்த சாட்சியத்தை நீதிபதி நம்ப வேண்டும் என ஏற்கனவே வழங்கப்பட்;ட நீதிமன்றத் தீர்ப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை ஒப்புறுதி செய்யும் வகையில் மருத்துவ பரிசேதாதனை செய்த வைத்தியரின் சாட்சியம் அமைந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளின்போது, வாய்பேச முடியாத பெண் என்ற அனுதாப அலை நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை மாறாக நான்கு எதிரிகளும் எப்படி தனக்கு பாலியல் வல்லுறவு புரிந்தார்கள் என்பதை எதிரிகளின் முன்னிலையிலேயே அந்தப் பெண் சாட்சியத்தில் தெரிவித்ததை நீதிமன்றம் விசேடமாகத் தனது கவனத்திற் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் நால்வரையும் கூட்டுப்பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் நீதிமன்றம் குற்றவாளிகள் என காண்கின்றது.
எனவே, இந்த கூட்டு;ப்பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்த ஒவ்வொரு எதிரிக்கும் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
எதிரிகள் ஒவ்வொருவரும், 25 ஆயிரும் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தண்டப் கட்டத் தவறினால் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அத்துடன் ஒவ்வொரு எதிரியும் 5 லட்ச ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும். நட்டயீடு செலுத்தத் தவறினால் 2 வருடம் சிறைவாசம் செய்ய வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
இந்த வழக்கை வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி சக்கி இஸ்மாயில் நெறிப்படுத்தினார்.