அ.தி.மு.கவுக்குத் தலைமை ஏற்க வருமாறு சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர் கட்சியின் சீனியர்கள். ‘ கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை உங்களால்தான் நிவர்த்தி செய்ய முடியும்’ என கட்சி நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளில் தீவிரமாக இருக்கிறார் சசிகலா. அதேநேரம், ‘ முதலமைச்சர் மரணமடைந்த மூன்றே நாட்களில் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் பேசுவது சரிதானா?’ என வேதனையோடு பேசுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், அவரைச் சந்திக்க உங்களை அனுமதிக்காதற்கு என்ன காரணம்?
இன்றுவரையில் எனக்கு அது புரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. எதற்காக அப்படிச் செய்தார்கள் என்றும் தெரியவில்லை. அவர்கள்தான் விளக்க வேண்டும்.
உங்கள் சகோதரர் தீபக், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதிக் காரியங்களைச் செய்தார். அப்படியானால், உங்கள் குடும்பத்தை சசிகலா புறக்கணிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?
எங்களுடைய குடும்பம் பாரம்பரிய பெருமை வாய்ந்தது. இதில், அக்கா குடும்பம், தம்பி குடும்பம் என்றெல்லாம் தனித்தனியாக எதுவும் கிடையாது. அத்தையின் குடும்பம் என்று சொல்லக் கூடியவர்கள் நாங்கள் இருவர் மட்டும்தான். எங்கள் பாட்டி, தாத்தாவுக்குப் பிறகு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். அவர்களுக்குப் பிறகு நாங்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறோம். இது ஒரு தலைமுறை. இதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லட்டும். அடிப்படையில், ரத்த சம்பந்தமுள்ள ஆண் மகன்தான் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது இந்து தர்ம சாஸ்திரப்படி உள்ள நியதி. அதற்காக, தீபக்கை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பெண்கள் சடங்குகளைச் செய்ய அனுமதியில்லை.
அப்படிப் பார்த்தால், முதல்வருக்கான இறுதிச் சடங்குகளை சசிகலாதானே செய்தார்?
அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்கள் பங்கேற்கலாமே தவிர, சடங்குகளைச் செய்யக் கூடாது.
உங்களைப் பற்றி அ.தி.மு.கவில் உள்ள சிலர் பேசும்போது, தீபாவின் திருமணத்திற்கே ஜெயலலிதா செல்லவில்லை. இப்போது ஏன் உரிமை கொண்டாடுகிறார் என்கிறார்களே?
அப்படிப் பார்த்தால் இளவரசி மகன் விவேக் திருமணத்திற்கு ஜெயலலிதா சென்றாரா? 2011-ம் ஆண்டு சசிகலாவை ஏன் கார்டனை விட்டு வெளியே போகச் சொன்னார்? அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். முதல்வரின் அண்ணன் மகளையே இல்லையென்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அதேபோல், நான் இருக்கிறேன் என்பதை நீங்கள் ஏன் மறுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.
அதேபோல், டான்சி வழக்கில் ஜெயலலிதா கைதானபோது தீபாவும் அவருடைய தந்தையும் எங்கே சென்றார்கள்? 35 ஆண்டுகால நட்பை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் சிலர் பேசுகிறார்களே?
டான்சி வழக்கிற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த வழக்குகள் எல்லாம் இவர்களால்தானே உண்டானது? இதில் எங்கள் அப்பா எங்கே வந்தார்?
‘முதல்வரின் கடைசி நாட்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கடமை’ எனக் கடிதம் எழுதியிருக்கிறார் நடிகை கௌதமி. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஓர் இந்தியப் பிரஜையாக அவருடைய கடமையை அவர் செய்திருக்கிறார். அப்படியொரு கடிதத்தை நான் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நான் வெளி ஆள் கிடையாது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அத்தையின் இழப்பு மிகப் பெரியது. மீண்டும் வருவார் என நம்பிக்கையோடு காத்திருந்தேன்.
ஜெயலலிதாவின் விசுவாசிகள் உங்கள் மீது அபிமானமாக இருக்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய கடமைகளைத்தான் செய்ய வந்தேன். இதற்கு நிறைய தடைகள் உள்ளன. இப்போதும், என்னுடைய கடமைகளைச் செய்ய விடுங்கள் என்றுதான் கேட்கிறேன்.
என்னென்ன கடமைகள் என்று வகைப்படுத்த முடியுமா?
இந்து சாஸ்திர சம்பிரதாயப்படி, அத்தைக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அதை சம்பிரதாயப்படி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
அப்படியானால், சாஸ்திரப்படி முதல்வருக்கான சடங்குகள் செய்யப்படவில்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. ஐயங்கார் முறைப்படி சம்பிரதாயங்களை செய்யவில்லை. அவற்றையெல்லாம் பின்பற்றினார்களா என்றும் தெரியவில்லை. கடைசியாக, ராஜாஜி மண்டபத்தில் அவருடைய முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவுதான்.
28 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தார் ஜெயலலிதா. தற்போது அந்தப் பதவிக்கு சசிகலாவை போட்டியின்றி தேர்வு செய்யும் வேலைகள் நடக்கிறதே?
இந்த விவகாரத்தில் நடக்கும் அரசியலைத்தான் பார்க்கிறேன். ஒரு தலைமை இப்போது இல்லை. அடுத்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சிக்காரர்களும் பொதுமக்களும்தான் தீர்மானிக்க வேண்டும். இப்படியொரு சந்தர்ப்பம் வர வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் காத்திருந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அந்த அடிப்படையில் நான் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், அ.தி.மு.க என்பது மக்களின் சொத்து. அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமா என்பதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
முதல்வர் சிறைப்பட்ட நாளில் கதறியபடியே அமைச்சராக பதவியேற்றவர்கள் பலரும், அவர் இறந்தபோது அமைதியாக இருந்ததை கவனித்தீர்களா?
இதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் எனச் சொல்லவே விரும்புகிறேன்.
முதல்வரைச் சுற்றி என்ன நடந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா?
சந்தேகம் இருந்தது என்று சொல்ல வரவில்லை. ஆனால், சரியான நேரத்தில் மக்களுக்கு அவர்கள் எதையும் சொல்லவில்லை. முறையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முதல்வருடைய போயஸ் தோட்ட இல்லம் உள்பட அவருடைய சொத்துக்களுக்கு நீங்களும் உங்கள் தம்பியும்தான் சட்டப்படியான வாரிசுகள்?
அவரது சொத்துக்கள் முழுமையாக எங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பது சட்டப்படியான உரிமை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்குள்ள ஒரே வருத்தம். அவர் இறந்து மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. அவரைப் பற்றி எந்த நினைவுகளையும் இவர்கள் சொல்லவில்லை. அதுதான் மிகுந்த வேதனையைத் தருகிறது.
உங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள் வருகிறதா?
அப்படி யாரும் மிரட்டவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. இத்தனை நாள் அவர்கள் அத்தையுடன் இருந்தார்கள். அது எப்போதும் சர்ச்சைக்குள்ளாகவே இருந்து வந்தது.
ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில் எப்படி வலம் வர விரும்புகிறீர்கள்?
என் அத்தை கடைசியாக என்ன விரும்பினார் என்பதை நிச்சயம் யாரிடமாவது சொல்லியிருப்பார். அதை முதலில் தெரியப்படுத்த வேண்டும். அதற்குச் சரியான ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும். எந்தக் காலகட்டத்திலும் அவர் அதிகாரத்தில் இருக்கும்போது யாரையும் வாரிசாக அறிவிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், யார் வாரிசு என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. அத்தை என்ன நினைத்தார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். கட்சிக்காரர்களும் பொதுமக்களும் சேர்ந்துதான் அடுத்தகட்ட தலைமையைத் தீர்மானிக்க வேண்டும். அ.தி.மு.க யாருடைய உடைமையும் கிடையாது. கட்சிக்குள் அதிகாரம் செலுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. மக்கள் விரும்பினால், அதைப் பற்றி பரிசீலிப்பேன்.