வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பேட் செய்து மொத்த கிரிக்கெட் உலகத்தின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ரிஷப் பந்த் உடன் இணைந்து அணியை மீட்டெடுத்தவர், கடைசி வரை அவுட் ஆகாமல் 96 ரன்கள் எடுத்தார்.
பௌலராக அணியில் சேர்க்கப்பட்டாலும், தன்னுடைய பேட்டிங்கால் இந்திய அணிக்குத் தொடர்ந்து நல்ல பங்களிப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்தவர், இங்கிலாந்துக்கு எதிராகவும் சென்னையில் அரைசதம் கடந்திருந்தார்.
டெஸ்ட் அரங்கில் இதுவரை பேட்டிங் செய்த 6 இன்னிங்ஸ்களில், 3 முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். ஆனால், அவரது இந்த பேட்ஸ்மேன் அவதாரம் திடீரென்று எடுக்கப்பட்டது இல்லை.
கிரிக்கெட்டும் தொடக்கமும்
“தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறன் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால், சர்வதேச அரங்கில் அதைக் காட்டுவதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிரூபித்திருக்கிறார்” என்று கூறினார் அவரது இளமை காலப் பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன்.
வாஷிங்டனின் இந்த சிறப்பான செயல்பாடு அவருக்கு ஆச்சர்யமாக இல்லை. ஏனெனில், அவர் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பத்திலேயே பேட்ஸ்மேனாகத்தான் தொடங்கியது. தமிழ்நாடு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அவர் அறிமுகமானதே ஓப்பனராகத்தான்! 2016 ரஞ்சி கோப்பைத் தொடரில், மும்பை அணிக்கெதிரான போட்டியில் கேப்டன் அபினவ் முகுந்த் உடன் ஓப்பனராகக் களமிறங்கினார் வாஷிங்டன்.
அதே ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார் வாஷிங்டன். அவரது பேட்டிங் மட்டும் பௌலிங் திறன் முழுமையாக அறிந்ததால், அவரை இரண்டாவது ரவுண்டிலேயே வாங்கியது அந்த அணி. அணியின் ஓப்பனர் அவர்தான்.
“பள்ளி அளவிலான போட்டிகள், வயது பிரிவு போட்டிகள், முதல் டிவிஷன் என அனைத்து வகையான போட்டிகளிலுமே ஓப்பனராக இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர் அவர். அதனால், எந்த இரண்டாம்பட்ச யோசனையும் இல்லாமல் அணியில் எடுத்துவிட்டோம்,” என்று கூறினார் அப்போது டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த மதனகோபால்.
ஐ.பி.எல் வாய்ப்பும், பௌலர் அடையாளமும்
தமிழக அணிக்காக ஆடியவரும், இந்திய அணியை 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் வழிநடத்தியவருமான செந்தில்நாதனிடம், 13 வயதில் பயிற்சி பெறத் தொடங்கினார் வாஷிங்டன். அவர் பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததால், எந்தக் காரணத்துக்காகவும் அதைக் கைவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால், பின்னாளில் அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது.
ரைஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் நெட் பௌலராக இருந்தவர், ஸ்டீவன் ஃபிளெமிங்கின் கவனத்தைப் பெற்றார். அதனால், 2017 ஐ.பி.எல் தொடருக்கான அந்த அணியில் இடம்பெற்றார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் காயத்தால் வெளியேற, அவரது இடத்தை சிறப்பாக பூர்த்தி செய்தார் வாஷிங்டன். சிக்கனமாகப் பந்துவீசிய அவர், 10 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், பேட்டிங் செய்ய பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் அடுத்த ஆண்டு வாங்கப்பட்டபோதும்சரி, இந்திய அணிக்கு அறிமுகம் ஆனபோதும் சரி, அவருக்குப் பெரிதாக பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பவர்பிளேவில் பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே பயன்படுத்தப்பட்டார் வாஷிங்டன். 2015-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் மட்டும் மிடில் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு பெரிய அரங்குகளில் பேட்டிங் வாய்ப்புகள் குறைந்தன.
“டி-20 போட்டிகளில் முதல் மூன்று இடத்தில் ஆடினால் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், ஆறாவது, ஏழாவது பேட்ஸ்மேனாக இறங்கும்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடாது.
அதிகபட்சம் 10 – 15 பந்துகள் சந்திக்கவேண்டியிருக்கும். அதுவும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டும் என்ற நிர்பந்தத்தில்! அதனால், வாஷிங்டனின் பேட்டிங் திறன் ஆரம்பத்தில் வெளியே தெரிவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை” என்று கூறுகிறார் செந்தில்நாதன்.
2017-ம் ஆண்டும், சதங்களும்
2017 வாஷிங்டனின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகமுக்கிய ஆண்டாக அமைந்தது. ஐ.பி.எல் வாய்ப்போடு சேர்ந்து இந்திய அணி அறிமுகமும் அவருக்கு அந்த ஆண்டில் கிடைத்தது. அதேசமயம், ஸ்பின்னராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர், அந்த ஆண்டின் பிற்பகுதியில் பேட்ஸ்மேனாகவும் பிரபலம் ஆனார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும், தமிழக அணிக்கும் தொடர்ந்து ஓப்பனராகவே களம் கண்டார் வாஷிங்டன். 2017 டி.என்.பி.எல் தொடரில் தன் முழு திறனையும் வெளிப்படுத்தினார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான போட்டியில் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியவர், மூன்று அரைசதங்களும் அடித்தார். அந்தத் தொடரில் 76.50 என்ற சராசரியில் 459 ரன்கள் குவிக்க, அவரது பேட்டிங்கைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தது.
அடுத்த இரண்டு மாதங்களில் அவரது பேட்டிங் திறன் முழுமையாக வெளிப்பட்டது. தான் அதிரடி பேட்ஸ்மேன் மட்டும் இல்லை, ஒரு முழுமையான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார் அவர். திரிபுரா அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் ஓப்பனராகக் களமிறங்கி சதமடித்தார். அந்த ரஞ்சி சீசனில் 39.37 என்ற சராசரியில் சிறப்பாகவே செயல்பட்டிருந்தார்.
எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த ரன்களும்
இப்படி பௌலராகவும், பௌலிங் ஆல்ரவுண்டராகவும் அறியப்பட்ட வாஷிங்டனின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ள ஆஸ்திரேலிய தொடர் மிகப்பெரிய காரணமாக அமைந்தது. தொடர் காயங்களால் அவதிப்பட்ட இந்திய அணிக்காக மிகமுக்கியமான பிரிஸ்பேன் டெஸ்டில் அறிமுகம் ஆனார் வாஷிங்டன்.
தன் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தியவர், இரண்டாவது இன்னிங்ஸில் பந்த் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். இந்த இங்கிலாந்து தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்து, தன் பேட்டிங் திறனை முழுமையாக நிரூபித்திருக்கிறார் இந்த 21 வயது இளைஞர்.
நம்பிக்கையும் மன உறுதியும்
அவர் இந்திய அணிக்காக அடித்திருக்கும் 3 அரைசதங்களுமே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அடிக்கப்பட்டவை. சூழ்நிலைகள் கடினமானதாக இருந்திருந்தாலும், எந்தவித சலனமும் இல்லாமல் நம்பிக்கையோடும் மன உறுதியோடும் விளையாடினார் வாஷிங்டன். அவரின் மிகச் சிறந்த தகுதியாக அவரது பயிற்சியாளர்கள் கூறிவது அதைத்தான்!
“அவருடைய மன உறுதி அபாரமானது. மிகக் கடினமான ஆஸ்திரேலிய சூழலில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடிப்பது சாதாரண விஷயம் இல்லை. முதல் தரப் போட்டிகளில் ரன் அடித்திருக்கிறார்தான்.
ஆனால், சர்வதேச போட்டிகளில் ஆடுவது என்பது வேறு விஷயம். அதையும் அவர் செய்திருக்கிறார். காரணம், எந்த சூழ்நிலையிலுமே தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற அவரது நம்பிக்கைதான்” என்று வாஷிங்டனின் மன உறுதி பற்றிக் கூறிகிறார் முன்னாள் தமிழக ரஞ்சி வீரர் மதனகோபால்.
இளம் வயது வாஷிங்டனிடம் கண்ட மன உறுதியைப் பற்றி வியப்போடு கூறுகிறார் செந்தில்நாதன். “வாஷிங்டனை என்னிடம் அவர் தந்தை அழைத்துவந்து பார்க்கச்சொன்னார். அப்போதே அவரிடம் ஒரு ஸ்பார்க் தெரிந்தது. நிச்சயம் அவருக்குப் பெரிய எதிர்காலம் இருக்கும் என்பதை உணர முடிந்தது”
“MRF பேஸ் ஃபவுண்டேஷனில் இருந்த பௌலர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் மாநில அளவில் ஆடும் தகுதியோடு இருந்தவர்கள். அவர்களின் பந்துவீச்சை மிகவும் அநாயசமாக எதிர்கொள்வார்.
ஒரு 13 வயது சிறுவன் அந்தச் சூழ்நிலையில் இருந்தால் அவரிடம் பயமோ பதற்றமோ தெரியும். வாஷிங்டன் முகத்தில் எதுவுமே தெரியாது. எந்தவொரு உணர்வோ, நெருக்கடியோ அவரிடம் காண முடியாது. அந்த மன உறுதிதான் அவரின் மிகப்பெரிய பலம்,” என்றார் செந்தில்நாதன்.
வாஷிங்டனின் பயிற்சியாளர்கள் மட்டுமல்ல, இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அதைத்தான் சொல்கிறார். “மிகவும் கடினமான சூழலில், உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் காட்டிய பாடி லாங்குவேஜ் அசாத்தியமானது. கொஞ்சம் கூட சலனமடையாமல், உறுதியோடு அவர் ஆடிய ஆட்டம் வியப்பளிக்கிறது” என்று அவரைப் புகழ்ந்தார் ரவி சாஸ்திரி.
புதிய அடையாளமும் எதிர்காலமும்
இதுவரை பௌலிங் ஆல்ரவுண்டர் என்று அறியப்பட்டவர், தன்னால் முழுநேர பேட்ஸ்மேனாகவே விளையாட முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ‘வாஷிங்டன் தான் இந்திய அணியின் எதிர்கால ஓப்பனர்’ என்ற பேச்சு இப்போதே எழத் தொடங்கிவிட்டது.
அதேசமயம் டெஸ்ட் அரங்கில் அவரது பௌலிங் இன்னும் எடுபடவில்லை. ஆனால், இப்போது ஒரு பௌலராக அவருக்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை என்று கூறுகிறார் செந்தில்நாதன்.
“ஒரு அணி 100 ஓவர்கள் பேட்டிங் செய்தால், மூன்றாவது பௌலருக்கு அதிக ஓவர்கள் பந்துவீச வாய்ப்பு கிடைக்கும். ஆனால், எதிரணி 50 ஓவர்கள்தான் பேட்டிங் செய்கிறது எனும்போது, அஷ்வின் போன்ற ஒரு ஸ்டிரைக் பௌலரும் அக்ஷர் படேலும் விக்கெட் வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் எனும்போது, இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். பேட்டிங்கில் எப்படித் தன்னை வாஷிங்டன் நிரூபித்தாரோ அதேபோல் பந்துவீச சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அவர் நிரூபிப்பார்” என்று கூறினார் அவர்.
அவரும் சரி மதனகோபாலும் சரி, அவர்கள் சொல்வது ஒரு விஷயம்தான். வாஷிங்டன் பேட்டிங் ஆல்ரவுண்டரோ, பௌலிங் ஆல்ரவுண்டரோ கிடையாது. அவர் ஆல்ரவுண்டர்!
அதேபோல், இந்திய அணியில் இந்த இடத்துக்குத்தான் வாஷிங்டன் பொறுத்தமாக இருப்பார் என்று எந்த முடிவும் செய்யத் தேவையில்லை என்கிறார்கள் அவரின் இரு பயிற்சியாளர்களும்.
“இந்தியாவுக்கும் சரி, கிரிக்கெட் உலகிற்கும் சரி தன்னால் என்ன முடியும் என்பதை வாஷிங்டன் உணர்த்திவிட்டார். எந்தவொரு வாய்ப்புமே கிடைக்குமா என்று தெரியாமல் சென்றவர், கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பிடித்துக்கொண்டார். பவர்பிளேவில் பந்துவீசவேண்டுமா, மிடில் ஆர்டரில் ரன் சேர்க்கவேண்டுமா, அணிக்குத் தேவையானதைச் செய்கிறார். அணிக்கு எது தேவையோ அதைச் செய்ய அவர் தயார் என்பதைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார் மதனகோபால்.
“ஒருவேளை ஒரு ஓப்பனர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அந்த இடத்திலும் இறங்கி வாஷிங்டன் சுந்தரால் தன்னை நிரூபிக்க முடியும்” என்று அவரைப் பாராட்டுகிறார் செந்தில்நாதன்.
சடகோபன் ரமேஷ்
“டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு சமீப காலங்களில் தேவையாக இருந்திருக்கிறது. எட்டு, ஒன்பதாவது பொசிஷன் வரை பேட்டிங் செய்யக்கூடியவர்கள் இருக்கவேண்டும் என்பதை கோலி எப்போதுமே விரும்பியிருக்கிறார்.
அதை வாஷிங்டன் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார். அணியின் தேவையை சரியாக உணர்ந்துகொண்டு, தன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அணிக்கு என்ன தேவை என்பதை எப்போதும் புரிந்துவைத்திருப்பது அவசியம். வாஷிங்டன் அதை சரியாகச் செய்திருக்கிறார்” என்று கூறினார் முன்னாள் இந்திய ஓப்பனர் சடகோபன் ரமேஷ்.
“வாஷிங்டனின் இந்த செயல்பாடு இந்திய கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும். வாஷிங்டனை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம், ஜடேஜா வந்தால் என்ன செய்வோம் என நிறைய கேள்விகள் அவர்கள் முன் எழும். இந்திய அணிக்கு இதுவும் மிகவும் நல்ல விஷயம். ஆனால், ‘சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் தயார்’ என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் வாஷிங்டன்” என்றும் கூறினார் அவர்.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார் வாஷிங்டன், பவர்பிளேவில் பந்துவீசவோ மிடில் ஓவரில் பந்துவீசவோ, மிடில் ஆர்டரில் இறங்கி அரைசதங்கள் அடிக்கவோ… அனைத்துக்கும் அவர் தயார். இத்தனைக்கும் அவருக்கு வயது இப்போதுதான் 21! இன்னும் பல ஆண்டுகள் இந்திய அணியின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் காத்துக்கொண்டிருக்கிறார் வாஷிங்டன்.