கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விதவிதமான கெட்டப்புகளில் வந்து பணக்காரன் போல் பாவனை செய்து பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி நாசமாக்கிய கட்டிடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி கன்னியாகுமரியில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 19ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் தேடிய பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். விசாரணையில் இறங்கிய போலீசார், மாணவியின் செல்போனை ஆராய்ந்தனர்.
அதில் காட்டாத்துறையை சேர்ந்த ஜோஸ்பிளின் ராஜகுமார் என்பவன் அடிக்கடி மாணவியிடம் பேசி வந்தது தெரியவந்தது.
அவனது செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது, அது கேரள மாநிலம் கோனி பகுதியில் இருப்பதாகக் காட்டியுள்ளது.
உடனடியாக கேரளா விரைந்த போலீசார், மாணவியை மீட்டு ஜோஸ்பிளின் ராஜகுமாரைக் கைது செய்தனர்.
கடந்த ஓராண்டாக மாணவி படிக்கும் பள்ளி முன்பு விதவிதமான ஆடைகளை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்து, அவருக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து காதல் வலையில் வீழ்த்தியதை ஜோஸ்பிளின் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனக்கு கேரளாவில் சொந்த வீடு இருப்பதாகவும் திருமணம் செய்துகொண்டு அங்கு சென்று சொகுசாக வாழலாம் என்றும் மாணவியிடம் கூறி அழைத்துள்ளான் ஜோஸ்பிளின் ராஜகுமார்.
இதனை நம்பி வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளியில் இருந்தபடியே வெளியேறிய மாணவியை, கோனி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான் ஜோஸ்பிளின் ராஜகுமார்.
அங்கு சென்ற சில நாட்களிலேயே அவன் பணக்காரன் அல்ல, கட்டிடத் தொழிலாளி என்பது மாணவிக்கு தெரியவந்துள்ளது.
மாணவியிடம் இருந்த நகைகள் அனைத்தையும் பிடுங்கி விற்று செலவு செய்து வந்துள்ளான் ஜோஸ்பிளின் ராஜகுமார்.
ஜோஸ்பிளின் ராஜகுமார் இதேபோல் பணக்காரன் வேடமணிந்து மேலும் பல சிறுமிகளை ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தொடர்ந்து அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் மேலும் ஒரு சம்பவமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.