விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து நஞ்சு ஊசிகள் ஏற்றப்பட்டமை தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதன்போது முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் நஞ்சு ஊசி ஏற்றப்பட்டதாக போராளிகள் தெரிவித்துள்ளமை தொடர்பாகவும் இதுவரை 107 முன்னாள் போராளிகள் உயிரிழந்தமை தொடர்பாகவும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு ஆளுநர் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த விடயம் தொடர்பாக நான் எதுவும் அறியவில்லை. அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதே நான் அறிந்துகொண்டேன்.
மேலும் குறித்த பிரேரணை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும் போது இது தொடர்பாக மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நான் எண்ணுகின்றேன்.
எனவே இவ் விடயங்கள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை தொடர்பில் என்னால் தற்போது பதில் வழங்கமுடியாது. இதேவேளை இவ் விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றபோது அதனை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் எடுத்துக் கூறும் பணியினையும் ஆற்றுவேன் எனத் தெரிவித்தார்.