முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக வெற்றி கொண்ட விநாயகரின் கதை கடந்த சில நாட்களாக அடிக்கடி நினைவில் வந்து போனது.
அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை கற்றறிவதற்கு சம்பந்தர், ஸ்கொட்லாந்துக்கு பறந்திருக்கும் செய்தியும் மறுபுறத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து, விக்னேஸ்வரன் அவர்கள் தமது தரப்பு தீர்வு வரைவை முன்மொழிந்திருக்கும் செய்தியும் கடந்த சில வாரங்களாக ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பதுதான்.
மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாகப் புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்னமும் என்ன தீர்வென்று தெரியாத நிலையில்தான், இந்த அரசியல் தலைமைகள் தடுமாறிக்கிடக்கின்றனவா?
தமிழ் தலைமைகளுக்கே, தீர்வு தொடர்பான தெளிவில்லாமல் வெளிநாடுகளிடம் ஆலோசனைக்கு புறப்படுகின்றபோது, சிங்கள தேசம் அந்த தீர்வை புரிந்துகொள்ளாமல் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது போன்ற சந்தேகங்கள் மக்கள் முன் எழலாம். அவை நியாயமானவையும் கூட.
ஏனெனில், தமிழ் மக்களின் பிரச்சினைகளில், காலகாலமாக தரப்புக்களின் வெற்றிதான் பெருவெற்றிகளாக வெளிக்காட்டப்பட்டிருக்கின்றவே தவிர மக்களின் வெற்றி என்ன என்று கேட்டால் தொடர்ந்து மறைநிலையிலேயே காணப்படுகிறது. இது, செல்வநாயகம் காலத்திலிருந்து ஒரே நிலைமைதான்.
இவ்வாறான ஒரு கால நீரோட்டத்தின் கடைசி சந்தியில்தான் இன்று சம்பந்தரும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு சண்டைபோடுகின்ற காட்சியை மக்கள் பார்க்கவேண்டிய நிலையில் உள்ளனர்.
முதலில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை வரலாற்று ரீதியாக பார்த்தால், அது தனிநாடுதான். அதனைத் தவிர வேறு எதனையும் தக்க பதிலாக இந்த அரை நூற்றாண்டு கால ஆக்கிரமிப்பு வாழ்க்கை அவர்களுக்கு கொடுக்கவில்லை.
திட்டமிட்ட இனக்கருவறுப்புக்குள் பல இலட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்த ஒரு தேசிய இனம், தமது இருப்பையும் மொழியையும் தேசியத்தையும் பாதுகாப்பதற்கு ஒரே வழி, பிரிந்து செல்வதுதான்.
இதனைத் தவிர வேறுவழியில்லை என்பதை சிங்கள தேசமே பல கால கட்டங்களில் உணர்த்திவிட்டது.
ஆனால், தனிநாட்டுக்கான தேவை வலியுறுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்து அந்தத் தேவையின் வழியாக பயணப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இன்று வந்து நிற்கின்ற காலப்பகுதியில் நின்று திரும்பி பார்க்கின்றபோது, அல்லது இந்த போராட்டத்தை சூழ கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற உலக யதார்த்தங்களை உற்று நோக்குகின்றபோது, தமிழர்கள் இன்னமும் தனிநாட்டுக்கான பயணத்தை நோக்கி பயணப்படுவது சாத்தியமா?
இதனைத்தான், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், தமிழ் மக்களின் முன்னால் தேர்தலின் மூலம் வாக்கு கேட்க சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியாக முன்வைத்தது.
பூகோள அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வாக சமஷ்டியே சாத்தியம் என்று வலியுறுத்தியது. அதனை முன்னெடுப்பதற்கு மக்களும் ஏகோபித்த ஆணையை வழங்கியிருந்தனர்.
இந்த தீர்வை நோக்கிய அரசியல் போராட்டத்தை, தாம் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்றபோதும், அன்றாட பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதில் கூட்டமைப்பு காண்பிக்கும் அளவுக்கதிகமான நெகிழ்ச்சிப்போக்கு, அவர்களது அரசியல் தீர்வு தொடர்பான போராட்டம் தொடர்பாகவும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது. கூட்டமைப்பின் பயணம் சரணாகதி அரசியலை நோக்கியதா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான், தாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடிவாளம் போடுகின்ற அமைப்பு என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு களத்தில் குதித்தது.
இந்த அமைப்பின் தோற்றம், இதற்கு பின்னாலுள்ள தனிப்பட்டவர்களின் அரசியல், அதன் நோக்கம் என்பவற்றுக்கு அப்பால், அரசியல் தீர்வு தொடர்பாக மக்களிடம் கருத்தறிய வேண்டிய முன்மொழிவு வரைவு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று முடிவெடுத்து, இன்று அந்த வரைவை மக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டிருப்பதை வரவேற்கவேண்டியது முக்கியமானது.
ஜனநாயகத்தை வரவேற்கும் எந்த தரப்பினரும் மக்கள் கருத்தறிவதற்காக மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிக்கு ஆதரவாக செயற்படவேண்டியது அடிப்படை பண்பு.
அந்த வகையில் தமிழ்க் கூட்டமைப்பினரின் ஸ்கொட்லாந்து பயணம் தொடர்பான நோக்கங்கள், பெறுபேறுகள், திட்டங்கள் ஆகியவை எதுவுமே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில்,
தமிழர் பேரவையின் தீர்வு முன்வரைவு தொடர்பாக ஆராய்வது இங்கு பொருத்தமாக இருக்கும். இந்த வரைவில்,
‘இலங்கை ஒரு சிங்கள பௌத்த தேசிய அரசாக இருப்பதே, தேசிய இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகும். தற்போதைய இலங்கை அரசில் முழு அரசும் ஒரு தேசத்தோடும் ஒரு மக்கள் கூட்டத்தோடும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இங்கு அரசானது, ஓர் அதிகாரப் படிநிலையை கொண்டிருப்பதும் அந்த அதிகாரப் படிநிலையில் சிங்கள பௌத்த அரசு முதல் நிலையில் இருப்பதுமே இங்கு பிரதான பிரச்சனையாகும். இந்த அதிகாரப் படிநிலையானது, ஒற்றையாட்சி முறைமையின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
தெற்கில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஒற்றையாட்சியின் பாற்பட்ட சிங்கள பௌத்த அரசு என்ற கருத்தியலில் உறுதியாக இருக்கின்றனர். இந்த கருத்தியல் தமிழ் அரசியல் அபிப்பிராயத்தின் எந்த வகையினருக்கும் ஏற்புடையதல்ல.
ஆகவே தான், அரசு தொடர்பில் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் அடிப்படை பார்வை இல்லாது, ஓர் அரசியலமைப்பு ஆக்க முயற்சியில் நாம் ஈடுபட முடியாது’ என்று தெரிவிப்பதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினையை என்பது ஒற்றையாட்சி முறையின் கீழ், மதவாதத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஆட்சியந்திரத்தினால் தீர்க்கப்படமுடியாது என்பதை வலியுறுத்தும் தமிழ் மக்கள் பேரவை சிங்கள தேசத்தின் அடிப்படை அரசியல் மாற்றத்தையும் மனமாற்றத்தையும் வலியுறுத்தியிருக்கிறது.
ஆனால், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் ஆட்சியிலிருக்கும் வரை வடக்கு – கிழக்கு இணைப்புக்கும் ஒற்றையாட்சிமுறை ஒழிப்புக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று அடித்துக்கூறியிருக்கிறார்.
இதற்காக வெளிநாட்டு தலையீட்டினையும் தமிழ் மக்கள் பேரவை கோரியிருப்பினும் இந்த இமாலய மாற்றத்தின் போக்கு எவ்வாறு இடம்பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அடுத்ததாக, தமிழ் மக்களின் தாயகம் என்ற விடயத்தில், இணைந்த வடக்கு – கிழக்கினை தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.
அதேபோல,ஆட்சி முறை தொடர்பான விரிவான விதந்துரைப்பிலும் சமஷ்டியை அடிப்படையாக கொண்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலங்களுக்கு உச்ச அதிகாரங்களை பகிர்ந்தளித்து முதலமைச்சர் தலைமையிலான கீழவையின் நிர்வாகத்தின் கீழ் ஆட்சி நடத்தும் யோசனையையும் பேரவை முன்வைத்திருக்கிறது.
இது தவிர மாநில அரசின் முடிவெடுக்கும் அதிகார வரம்புக்குள் வரவேண்டிய 54 விடயங்களையும் மத்திய அரசின் அதிகாரவரம்புக்குள் வரக்கூடிய 37 விடயங்களையும் பட்டியல்படுத்தியுள்ளது.
அவற்றில் முக்கியமாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாநில அரசின் அதிகாரங்களுக்கு கீழ் வலியுறுத்தும் பேரவை மத்தியின் அதிகாரத்துக்கு கீழ் வரக்கூடிய வெளிவிவகார கொள்கை தொடர்பாகவும் மாநில அரசின் பங்களிப்பை கோரியிருக்கிறது.
நிதி கையாளுகை தொடர்பான யோசனையில், ‘வடக்குக் கிழக்கு மாநிலமானது சர்வதேசத்திடமிருந்து நேரடியாக கடன் மற்றும் உதவி பெறுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன், வடக்கு – கிழக்கின் கடன் சுமையானது, மத்திய அரசாங்கத்தின் பொறுப்புடைமையாக இல்லாத வேளையில் மத்திய அரசாங்கத்தில் தலையீடு இன்றி சர்வதேச உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கான உரிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்’ என்று கூறியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, நல்லாட்சி என்ற மகுடத்தின் கீழ் எவ்வளவுதான் கைங்கரியங்களை மேற்கொண்டுவந்தாலும், அவை எல்லாம் மஹிந்த ஆட்சியினால் நாட்டில் படிந்துள்ள கறையை நீக்குவதற்கான செயல்முறைகளாகவே அவற்றை முன்னெடுக்கிறதே தவிர,
தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்ட எந்த படிமுறையாகவும் அவை இல்லை என்பதே இன்றுவரை காணக்கூடியதாகவுள்ள வெளிப்படை உண்மை.
தங்களுக்கான தீர்வு வரைவுகள் பலவற்றை காகிதங்களில் மட்டும் கண்டு அனுபவம் பெற்றவர்கள் தமிழ் மக்கள். அதன் இன்னொரு பதிப்பாகத்தான் பேரவையின் முன்மொழிவும் காணப்படக்கூடும்.
ஆனால், அடிப்படையில் காத்திரம் மிக்க இந்த முன்மொழிவுகளை அதிகாரம் மிக்க கூட்டமைப்புடன் இணைந்து பரஸ்பர நம்பிக்கையுடன் முன்னெடுத்தால், அந்த பயணம் ஆரோக்கியமாக அமையும். தீர்வுக்கான மக்கள் விருப்பத்துக்கு முன்னர் இந்த ஒற்றுமைக்கான மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே இங்கு அவசியமாகவும் அமையும்.