வேலூர்: வேலூர் அருகே 6ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கடனை அடைக்க கொலுசை கேட்டதற்கு தர மறுத்ததால் கொன்றதாக அந்த மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல், கடையடைப்பு நடந்தது.
வேலூர் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி.
2 மகள், ஒரு மகன் உண்டு. இவரது 2வது மகளான கீர்த்திகா (11), அருகில் உள்ள மச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை கொடூரமாக கொலை செய்து புதரில் போட்டது கண்பிடிக்கப்பட்டது. மாணவி பாலியல் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் மூலம் சடலம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் கீர்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து விட்டனர். கலெக்டர் உட்பட எந்த அதிகாரியும் வராத நிலையில் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தியும் வாங்க மறுத்ததால் சடலத்தை மீண்டும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று அதிகாலை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தை கீர்த்திகாவின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ உள்பட எந்த அதிகாரிகளும் வரவில்லை.
அவர்கள் வந்தால்தான் சடலத்தை வாங்குவோம். அதுவரையிலும் இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டிஎஸ்பி விஜயகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். இதேபோல் கே.வி.குப் பம் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தனியாக சாலை மறியல் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து கே.வி.குப்பத்தில் நேற்று வணிகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது.
கீர்த்திகா படித்த பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். இதையடுத்து காலை 9.30 மணியளவில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஓசூரில் சிக்கினான்: இந்நிலையில் நேற்று அதிகாலை, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் போலீசார் ரோந்து சென்றபோது தப்பியோட முயன்ற சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவன், வேலூர் அருகே காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்றும், மாணவி கீர்த்திகாவை கொலை செய்ததும் தெரியவந்தது.
பெங்களூருக்கு தப்பி விடலாம் என்று திட்டமிட்டு ஓசூர் வந்தவன் போலீசில் மாட்டிக்கொண்டான். இதுகுறித்து எஸ்பி கண்ணம்மாள், வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து தனிப்படை போலீசார் ஓசூர் வந்து, மாணவனை அழைத்து சென்றனர்.
கலெக்டர் வந்தார்: டிஐஜி தமிழ்ச்சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி, டிஆர்ஓ மணிவண்ணன் ஆகியோர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திலேயே இருந்தனர். பகல் 12.35 மணியளவில் கலெக்டர் நந்தகோபால் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோரை அழைத்து பேசினார். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு சடலத்தை பெற்று சென்றனர்.
மாணவன் பரபரப்பு வாக்குமூலம்:
பிடிபட்ட மாணவன் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: நான் கீர்த்திகாவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது குறுக்கு வழியில் செல்லலாம் என்று கூறி அழைத்தேன். சம்பவ இடத்திற்கு சென்றதும் எனக்கு கடன் இருக்கிறது. பெற்றோர் பணம் தர மறுக்கிறார்கள்.
உன் கொலுசை கொடு என்று கேட்டேன். அதற்கு கீர்த்திகா மறுத்துவிட்டாள், உன்னைப்பற்றி என் அப்பாவிடம் சொல்வேன் என கூறினாள். இதனால் பயந்துபோன நான் அவளது கழுத்தை துப்பட்டாவால் நெரித்தேன்.
அதில் மயங்கி கீழே விழுந்தாள். பின்னர் கீர்த்திகா தலையில் இரட்டை ஜடையில் கட்டியிருந்த ரிப்பனை எடுத்து அவளது கை, கால்களையும், துப்பட்டாவால் வாயையும் கட்டினேன். அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து தலையில் அடித்தேன்.
உடைந்த பாட்டிலை எடுத்து மார்பு பகுதியில் குத்தி கொலை செய்தேன். பின்னர் கீர்த்திகாவின் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு மற்றும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். உடந்தையாக இருந்த மேலும் 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காணாமல்போன எம்எல்ஏ
கே.வி.குப்பத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 நாட்களாக போராட்டம் நடந்தபோதிலும் கூட தொகுதி எம்எல்ஏ செ.கு.தமிழரசன் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏ மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.