முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் சொத்து மற்றும் பொருட்கள் விபரங்களை சாட்சியாக தரவு வழங்க வேண்டுமாயின் அதற்கு 472,200 அமெரிக்க டொலர் தேவை என குறித்த வங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வங்கி சார்பில் சட்டத்தரணி கருத்து முன்வைத்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தரவுகளை வழங்க கணினி செயற்பாடு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு 472,200 அமெரிக்க டொலர் செலுத்த இயலுமாயின் தரவுகளை வழங்க முடியும் என்றும் வங்கி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதால் அதற்கு கட்டுப்பட்டு வங்கி தரவுகளை வழங்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து நவம்பர் 3ஆம் திகதி கருத்து முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தனியார் வங்கி பிரிவு பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் நீதியரசர் தனியார் வங்கியில் வைத்திருந்த விசேட நடமாடும் கணக்குகள் இரண்டு தொடர்பான தகவல்களை மூன்று வருடங்கள் மறைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு தாக்கல் செய்த வழக்கு மீது விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.