பரிசோதனை கூடம் ஒன்றுக்கு ஸ்கேன் பரிசோதனைக்குச் சென்ற பெண் ஒருவரை நிர்வாணமாக்கி கையடக்க தொலைபேசியில் படமெடுத்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
MRI_smசிறுநீரகம் சார்ந்த நோய் தொடர்பாக ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
பரிசோதனைக்காக சென்றிருந்தபோது, மேற்படி வைத்தியசாலையின் இரசாயன கூட ஊழியரான சந்தேக நபர், அணிந்திருந்த உடைகளை களைந்து இவ் விசேட உடைகளை அணிந்து கொள்ளுமாறு அப் பெண்ணிடம் ஸ்கேன் பரிசோதனைகளின்போது அணிந்துகொள்ளும் உடையினை வழங்கியுள்ளார்.
அதற்கமைய குறித்த உடையை அணிந்து கொண்டதன்பின்னர் அந்த ஊழியரின் வேண்டுகோளுக்கு அமைய பரிசோதனை கட்டிலில் படுத்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளின்போது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டுமென தெரிவித்ததோடு அந்நிலையை ஏற்படுத்துவதற்காக கறுப்பு நிறப் பட்டி ஒன்றினால் சந்தேக நபர் தனது கண்ணை கட்டியதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு சிறிது நேரத்தின் பின்னர் தனது உடலில் குறித்த ஊழியரின் கை ஸ்பரிசம் செய்வதனை போன்று உணர்ந்து எழுந்ததுடன் கண்ணில் கட்டியிருந்த கறுப்பு பட்டியை கழற்றி பார்த்தபோது அந்நபர் அவரது கைத்தொலைபேசியில் தனது உடலை படம்பிடித்துக் கொண்டிருப்பதனை கண்டு அப் பெண் கூச்சலிடவே சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் அப் பெண் அவரை இடைவிடாது பின்தொடர்ந்து அவரை மடக்கிப்பிடித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கண்டி பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேற்படி தனியார் வைத்தியசாலை கதிர்வீச்சு பரிசோதகராக கடமையாற்றிவந்த 35 வயதான நபரொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்படட மேலதிக விசாரணைகளில் இருந்து அந்நபரின் கைத்தொலைபேசியிலிருந்து முறைப்பாட்டாளரான பெண்ணின் புகைப்படங்கள் சிலவற்றையும் வேறு சில ஆபாசமான படங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதிவான் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் மன்ற பிரதம நீதிவான் கிஹான் இந்திக்க அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.