மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் தி.மு.க மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதில் நரேந்திர மோடி ஸ்டாலினை வணங்குவது போன்று அச்சிடப்பட்டிருந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மதுரை 71-வது வட்ட இளைஞரணி சார்பிலும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர்.
அதில், மு.க. ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் மன்மோகன்சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சிரம் தாழ்த்தி வணங்குவது போல படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இந்தப் போஸ்டருக்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாகக் கூறி பாஜக-வின் பாலரெங்காபுரம் மண்டலத் தலைவர் பெட்டிக்கடை ரவி என்பவர் தெப்பக்குளம் பொலிஸ் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் அளித்துள்ளார்.
பொலிஸார் இது குறித்து கூறுகையில், “பாஜக புகார் மீது விசாரித்து வருகிறோம். அந்த போஸ்டரில் 71-வது வட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆர்.எம்.கார்த்தி பெயரும் புகைப்படமும் இருப்பதால் அவரிடம் விசாரிக்க உள்ளோம்’’ என்றனர்