ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் கார் மீது நிர்வாணமாக ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஸ்பெய்னில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸினால் உலகில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெய்ன் உள்ளது. அந்நாட்டில் 172,541 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 18,056 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெய்ன் முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன. அண்மைய நாட்களில் புதிய தொற்றுகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கைகள் குறைவடைந்ததையடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் உற்பத்தி மற்றும் நிர்மாணத்துறை ஊழியர்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், டோரேமொலினஸ் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதன்பின், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மேற்படி பெண், தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் கார்களில் ஒன்றின் மீது ஏறி நின்றுகொண்டார்.
தான் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.