அரசியல் கைதிகளென இலங்கை சிறையில் எவரும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருமே விடுதலைப்புலிகள். வடக்கின் அரசியல்வாதிகள் கூறுகின்றனர் என்பதற்காக புலிகளை விடுதலை செய்ய முடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித் தார்.
வடக்கில் ஹர்த்தால் நடத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இவை அனைத்தும் வடக்கின் அரசியல் நாடகமாகும் என் றும் அவர் குறிப்பிட்டார்.
பியகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது; சிறையில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்யக்கோரியே இன்று தமிழ் மக்களில் ஒரு சாரார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அவர்கள் கோரியதற்காக, உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்துவதால் அல்லது ஹர்த்தால் நடத்துவதால் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய இயலாது. இப்போது சிறையில் உள்ள அனைவரும் யுத்தத்தின் போது மோசமாக செயற்பட்ட முக்கியமான நபர்களே.
இவர்களை பாரிய குற்றங்களில் கைது செய்துள்ளோம். இப்போது அரசியல் வாதிகள் தமது தேவைக்காக செய்யும் போராட்டங்களை கொண்டோ அல்லது கோரிக்கை விடுவதன் மூலமோ அவர்களை விடுவிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
அதேபோல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்ளது. அதனை நாம் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
நீதி அமைச்சர் இந்த விடயங்களை நன்கு அறிந்துள்ளார். இப்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நான் கருதுகின்றேன் .
ஆனால் வடக்கின் அரசியல் வாதிகள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள வடக்கில் மக்களை தூண்டிவிட்டு ஹர்த்தால், ஆர்ப்பாட்டங்களை நடத்துவது வருந்தத்தக்கவிடயமாகும்.
மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். வடக்கு மாகாணசபைக்கு கிடைத்துள்ள நிதியில் கூட மக்களுக்கு சேவை செய்யாத இவர்கள் மக்களை குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முயற்சிகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் கைதிகளை விடுதலை செய்ய நாம் ஒருபோதும் தயாராக இல்லை. இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இவர்களை அரசியல் கைதிகள் என கூறுவதை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.
இவர்கள் புலிகளின் பயங்கரவாத உறுப்பினர்கள்.
இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழலை இவர்கள் உருவாக்குவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. வடக்கின் அரசியல்வாதிகள் கூறும் கதைகளுக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.