கண்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 19 நாட்கள் தங்கியிருந்து சுகபோகம் அனுபவித்துவிட்டு சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தாமல் தலைமறைவாகி உள்ள தம்பதியினரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த தம்பதியினர் தமது குழந்தைகளுடன் நான்கு நாட்கள் தங்கி இருந்து அவர்கள் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தி விட்டு வெளியேறி உள்ளனர்.
பின்னர் சில தினங்களில் மீண்டும் வந்து அதே ஹோட்லில் தங்கி உள்ளனர். 19 நாட்கள் தங்கியிருந்த நிலையில் மூன்று இலட்சத்து 60 ஆயிரம் ரூபா வரை பாக்கிப் பணம் இருந்துள்ளது. அதனைச் செலுத்தாது அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தம்பதியினரில் ஆண் கொழும்பு 12 ஐ சேர்ந்தவர் எனவும் பெண் ஹெந்தல, வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த தம்பதியினரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.