இந்திய பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீரென 100 கோடி ரூபா மிகுதி; பணம் எவ்வாறு கணக்குக்கு வந்தது என்பதை அறிய உதவுமாறு இந்திய பிரதமர் அலுவலகத்திடம் கோருகிறார்
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் திடீரென சுமார் 100 கோடி இந்திய ரூபா (சுமார் 220 கோடி இலங்கை ரூபா) மிகுதியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளதுடன், இப் பணம் எவ்வாறு தனது வங்கிக் கணக்குக்கு வந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷீட்டல் யாதவ் எனும் இப் பெண், மீரத் நகரிலுள்ள அரச வங்கியான ஸ்டேட் பாங்க் ஒவ் இண்டியாவின் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார்.
மாதாந்தம் 5,000 இந்திய ரூபா வருமானம் பெறுபவர் இவர். கடந்த 18 ஆம் திகதி இவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் மீளப் பெறுவதற்கு சென்றபோது அவரின் கணக்கில் மிகுதியாக 99,99,99,394 இந்திய ரூபா காட்டப்பட்டது.
அதாவது, 100 கோடி இந்திய ரூபாவுக்கு 604 ரூபாவே குறைவு. தனது கணக்கில் சுமார் 100 கோடி ரூபா இருப்பதாக ஏ.ரி.எம். இயந்திரம் காட்டியதை ஷீட்டல் யாதவினால் நம்ப முடியவில்லை.
அதனால், தனக்கருகில் வரிசையில் காத்திருந்த மற்றொருவரை அழைத்து தனது கணக்கில் நிலுவையாக உள்ள தொகையை பார்க்கும்படி கூறினார். அந் நபரும் 99,99,99,394 கோடி ரூபா மிகுதியாக இருப்பாக கூறினார்.
மறுநாள் மற்றொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்தில் தனது கணக் கில் நிலுவைத் தொகையை சோதித்தபோதிலும் அத்தொகை மூலம் காட்டப்பட்டது.
இப் பணம் எவ்வாறு தனது கணக்குக்கு வந்தது என்பது தொடர்பாக தனது வங்கி அதிகாரிகள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என ஷீட்டல் யாதவ் கூறுகிறார்.
இது தொடர்பாக தனது கணவர் சைலேந்தர் சிங்குடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மனைவி பொதியிடல் நிறுவனமொன்றில் பணியாற்றி 5,000 ரூபா மாதாந்த வருமானம் பெறுபவர் எனவும் தனக்கும் சொற்ப தொகையே வருமானமாக கிடைப்பதாகவும் சைலேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
“அதிகபட்சமாக 50,000 ரூபாவே ஒரே தடவையில் வைப்புச் செய்யலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 கோடி ரூபா எங்கிருந்து வந்தது என அறிய உதவுமாறு டிசெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்” எனவும் சைலேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.