13 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர் வைத்திருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மூவரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகளாக வந்தவர்களிடம் அமெரிக்க டொலர் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மூவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் கொழும்பில் உள்ள தனது நண்பரின் உதவியுடன் டொலரை மாற்றித் தருவதாக கூறியதையடுத்து டொலருடன் கிண்ணியாவுக்கு வேனில் வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
டொலரை மாற்றித் தருவதாகக் கூறிய நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே உப்பாற்று பாலத்தில் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் தற்பொழுது திருகோணமலையில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.