பண்டாரவளை-அப்புத்தளை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காரொன்று, வீதியை விட்டு சுமார் 150 அடி பள்ளத்துக்குள் வீழ்ந்ததில் குறித்த காரில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், காரில் பயணித்த தாயும் சகோதரனும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜேர்மன் பெண்ணும், பாதுகாப்பு அதிகாரியும் கைது
10-04-2016
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டுப்பெண்ணும், பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவ்விருவரையும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜேர்மன் நாட்டு பெண்ணொருவர் (வயது 29), நுழைவுப்பத்திரமின்றி, அநுராதபுரம் அபயகிரி நூதனசாலையை பார்வையிடுவதற்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கும், அப்பெண்ணுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கத்தையடுத்து பாதுகாப்பு அதிகாரி, தன்னை தாக்கியதாக அந்த வெளிநாட்டுப்பெண், அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணைகளை நடத்திய பொலிஸார், இவ்விருவரையுமே கைதுசெய்து, பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.
தன்னுடைய காதலியை கொலை செய்த நபரொருவர், ஓடும் ரயிலில் பாய்ந்ததால் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர் தன்னுடைய 32 வயதான காதலியை கொலை செய்துவிட்டு இவ்வாறு ரயில் முன்பாக பாய்ந்துள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்