கொல்கத்தாவில் இணையதளம் மூலம் டேட்டிங் செய்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய கால் சென்டர் மையத்தை சேர்ந்த 23 பெண் ஊழியர்களும் , அலுவலக பணியில் இருந்த வேறு மூவரும் விசாகப்பட்டினம் சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலிருந்து இயங்கிய ஆன்லைன் டேட்டிங் நிறுவனம் செய்த மோசடியில் பாதிக்கப்பட்ட அவர் 18 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நடத்தும் குழுக்கள் இணையதளம் மூலம் டேட்டிங் என்ற பெயரில் வலைத்தளத்தை உருவாக்கி பல பெண்களின் போலி சுயவிவரங்களையும் படங்களையும் பதிவேற்றும் செய்து, முழு மோசடியையும் இணையம் மூலமாகவே செயல்படுத்துவதாக பேசிய விசாகப்பட்டினம் சைபர் கிரைம் ஆய்வாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இந்த வலைத்தளத்தில் பதிவுசெய்த பயனாளர்கள் தங்கள் அலுவலகங்கள் நாட்டின் எந்த பகுதிகளில் செயல்படுகிறதோ அந்த பகுதிகளிலெல்லாம் டேட்டிங் செய்யலாம் என வலைத்தளம் கூறுகிறது. இதற்கான பதிவு கட்டணம் 1000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கள் விவரங்களை வலைத்தளத்துடன் பதிவுசெய்தவுடன், அந்நிறுவனத்திடமிருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெண்ணுடன் பேசுவதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும்.
பயனர்கள் செலுத்தும் தொகையைப் பொறுத்து வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் கார்டுகள் போன்ற பல்வேறு சலுகைகளுடன் இந்த வலைத்தளம் பயன்பாட்டாளர்களை ஈர்க்கிறது. இந்த பயனாளர் கார்டுகளுக்கான கட்டணம் 2 லட்சம் முதல் பத்து லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்களுடன் டேட்டிங் , வெளியே செலுத்தல் , திரைப்படம் மற்றும் பயணங்களுக்கு செலுத்தல் போன்ற சேவைகளை அந்த கார்டு வைத்து இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் பிளாட்டினம் கார்டு வைத்திருப்பவர்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கட்டணம் செலுத்திய பிறகு, பயன்பாட்டாளருக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வரும். அந்த பெண் தொடர்ந்து பயன்பாட்டாளருடன் உரையாடலில் ஈடுபடுகிறார், பின்னர் பயன்பாட்டாளருக்கு அழைப்பு வருவது நிறுத்தப்படுகிறது.
அந்த பயனாளர் திரும்ப அந்த பெண்ணிற்கு அழைப்புவிடுக்கும்போது, அந்த பெண் தனியுரிமை கட்டணங்களை அந்நிறுவனத்திடம் இருந்து பெறவில்லை என்ற பதில் அனுப்பப்படுகிறது.
எனவே அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச ஒரு லட்சம் ரூபாயை தனியுரிமை கட்டணமாக அந்த பயன்பாட்டாளர் செலுத்த வேண்டும்.
இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து சுயவிவரங்களும் போலியானவை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
அவர் தேர்ந்தெடுத்த பெண்ணை பலமுறை தொலைபேசியில் அழைத்தபோதும் தொடர்புகொள்ள முடியாதபோதும் சந்திக்க முடியாதபோது தான் ஏமாற்றப்பட்டதை பயன்பாட்டாளர் உணர்வார்.
வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை உணர்ந்து தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டால், மேலும் 5 லட்சம் ரூபாய் கூடுதல் வைப்புத்தொகையை கேட்கிறார்கள்.
அந்த தொகையில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையைத் திருப்பித் தருவதாககவும் அந்நிறுவனம் கூறுகிறது.
ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் எந்தவொரு தொகையையும் பெறுவதில்லை, சில நாட்களுக்கு பிறகு அந்நிறுவனம் வழங்கிய தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்படுகின்றன.
இந்த ஆன்லைன் மோட்டியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பலர் புகார் அளிக்க அஞ்சுகின்றனர்.
இந்த வழக்குகளின் தன்மை காரணமாகவும், தாங்கள் கேலிக்கு ஆளாவதை தவிர்க்கவும் காவல்துறையில் புகார் அளிப்பதில்லை. இதுவே இவ்வாறான ஆன்லைன் மோசடி வலைத்தளங்கள் வளர்ச்சி அடைய காரணமாக அமைகிறது.
காவல்துறையினர் விசாரணை
வாட்ஸ் அப் தரவுகள் , தொலைபேசி அழைப்புகள், வலைத்தள பதிவுகள் வைத்து , இந்நிறுவனம் செயல்படும் இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் இந்நிறுவனம் கொல்கத்தாவில் மென்பொருள் நிறுவனம் என்ற தோற்றத்துடன் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டாலும் , இந்நிறுவனத்தை உருவாக்கிய முக்கிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதுபோன்ற வலைத்தளங்கள் நாடு முழுவதும் இயங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.