நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் நேற்று (20) உறுதி செய்யப்பட்டன.
38 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
லுணுகலை, உடுகிந்த, பலாங்கொடை, கட்டுநாயக்க, பதுரகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாதுஓயா, பண்டார கொஸ்வத்த, பொரளை, பாதெனிய, தோரயாய, பொல்கஹவெல, கல்கமுவ, சியம்பலாண்டுவ, மதுகம, எதனவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், எட்டியாந்தோட்டை, பெலிஹுல்ஓயா, நெபட, கெக்குணுகொல்ல, நிக்கவெரட்டிய, வரக்காபொல, அம்பிட்டிய, மாரஸ்சன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளிலேயே நேற்று கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்தவர்களில் 24 பேர் 71 வயதிற்கும் மேற்பட்டோர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
61 முதல் 70 வயதிற்குட்பட்ட 10 பேரும் 51 தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட ஒருவரும் 41 தொடக்கம் 50 வயதிற்கு இடைப்பட்ட ஒருவரும் 31 தொடக்கம் 40 வயதிற்கு இடைப்பட்ட இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 38 பேரில் 19 பேர் பெண்களாவர்.
இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3,441 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,54,786 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
30,203 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1,23,532 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.