டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ ஒருவரை பெண் ஒருவர் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 20 ஆயிரம் லீட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனையடுத்து கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி 28 இடங்களை பிடித்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது.
டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றவுடன் மீட்டர் வசதியுடன் குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மாதம் 20 ஆயிரம் லீட்டர் தண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கு மேல் உபயோகப்படுத்தினால் மொத்த தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இந்நிலையில் டில்லியின் பலபகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பே இல்லை. என்றும் அரசின் இந்த அறிவிப்பால் பெரும்பாலான மக்களுக்கு பலன் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கம் விகார் பகுதியில் பல இடங்களில் மக்களுக்கு இலவச தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பொது மக்கள், ஆத்திரத்தில் இருந்தனர்,
இந்நிலையில் எம்எல்ஏ தினேஷ் மொகானியா நேற்று அப்பகுதி மக்களிடம் குறை கேட்க சென்றார்.அப்போது பொதுமக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினர். இதில் தினேஷ் மொகானியாவை ஒரு பெண் திடீரென்று கன்னத்தில் அறைந்தார். அருகில் இருந்தவர்கள் எம்எல்ஏவை அங்கிருந்து உடனடியாக அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.