சிலை மாதிரி நிற்காதே என்று இனி யாரையும் திட்டாதீர்கள் சிலையாக இருப்பதில் கூடப் பிரச்சினைகள் இருக்கிறது!
சென்னையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றச் சொன்னால் நெல்லையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது. இதைக் கண்டித்து எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்து சிலையைத் தூய்மைப்படுத்தியிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்!
ஜனவரி 23 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் கடற்கரைசாலையில் போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணித்தலைவரும் சிவாஜியின் பரம இரசிகருமான சிவாஜி முத்துக்குமார். இவர் சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினராவார்.
சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த முத்துக்குமார் திடீரென ஆவேசமாகி தனது காலில் கிடந்த செருப்புகளைக் கழற்றி ஒரு கயிற்றால் கட்டி மாலை போல் மாற்றினார். அதனை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் அருகே இருந்த எம்.ஜி.ஆர். சிலை பீடத்தில் ஏறி சட்டென எம்.ஜி.ஆர். சிலையின் கழுத்தில் போட்டுவிட்டார்.
அந்தக் காட்சியைக் கண்ட வாகன ஓட்டிகள் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்கவே டிராபிக் பொலிஸ்காரர் பதறியபடி ஓடிவந்து சிவாஜி முத்துக்குமாரின் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் பொலிஸ் வண்டியில் ஏற்றினார்.
பாலையங்கோட்டை பொலிஸ் அவர்மீது வழக்குப் போட்டு கோர்டில் ஆஜர்படுத்திய பின் காங்கிரஸ் வக்கில் காமராஜின் உதவியுடன் ஜாமீனில் வெளிவந்துள்ளார் முத்துக்குமார்.
ஏன் இந்த வேலை? என்று முத்துக்குமாரிடம் கேட்டபோது நான் சிறுவயது முதல் சிவாஜி ரசிகன். தமிழகத்தில் 128 இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை அமைத்தவர் சிவாஜி. தேவர் கட்டபொம்மன் ஆகியோருக்கும் சொந்தச் செலவில் சிலை அமைத்தவர். 5 கோயில்களுக்கு யானையை தானமாகக் கொடுத்தவர்.
நடிப்பில் அவரது இடத்தைப் பிடிக்க உலகில் யாரும் பிறக்கவில்லை. அப்படிப்பட்டவரின் சிலையை அப்புறப்படுத்துவது ஒரு மகா கலைஞனை அவமானப்படுத்தும் செயல். கடந்த எட்டு மாத காலமாகவே சிவாஜி சிலையை அப்புறப்படுத்தக்கூடாது என்று பல போராட்டங்களை சிவாஜி மன்றம் நடத்தியது.
அன்றிலிருந்தே ஃபேஸ்புக்கில் அ.தி.மு.க. மற்றும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் எங்களை கன்னாபின்னாவென தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்தார்கள் . இதையெல்லாம் பார்த்து டென்ஷனாகிப் போயிருந்த நான் ஆத்திரத்தில் என்ன செய்கிறேன் என்பது தெரியாமல் செய்த காரியம் அது.
எங்கள் உணர்வுகளைக் காட்டவே இப்படிச் செய்தேன் என்றார் ஆவேசத்துடன்.
இந்தச் சம்பவம் அறிந்து கொதித்த அ.தி.மு.க.வினர் மாவட்டப் பொருளாளர் கணேசராஜா தலைமையில் திரண்டு வந்து அந்தச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து சிலையை புனிதப்படுத்தினர்.
கணேசராஜாவிடம் பேசினோம். சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்பது கோர்ட் உத்தரவு. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதற்கும் துளிகூட சம்பந்தமில்லை. ஆனால் முகவரியே இல்லாத ஒருவர் பப்ளிசிட்டிக்காக எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினார். நாங்கள் தூய்மைப்படுத்தி விட்டோம் என்றார் சுருக்கமாக.
சிலை மாதிரி நிக்காதே என்று இனி யாரையும் திட்டாதீர்கள் சிலையாக இருப்பதில் கூட பிரச்சினைகள் இருக்கிறது.