‘வடமாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிட நாம் தீர்மானித்த போது ஜனதிபதிக்கும் எனக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
தனித்துப் போட்டியிட தீர்மானித்ததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுவோம் என இந்த அரசாங்கத்தின் பாங்காளியான இன்னொரு முஸ்லிம் கட்சி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே அந்த முரண்பாடு ஏற்பட்டது’ என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
‘முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் சிலரை ஆட்கொண்டிருக்கின்றது. இதனால், முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிட்டால் ஆபத்தென்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணசபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாணந்துறை ஹேனமுல்லையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘ஆளும் கட்சியில் சங்கமம் அடைந்து போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத கடந்தகால அனுபவத்தை நினைவூட்ட விரும்புகின்றேன். நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதே கடினமானதாக இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பேரினவாத அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு மாகாண சபை ஆசனம் ஒன்றைப் பெறுவது அடைய முடியாத விடயம். எட்டமுடியாத இலக்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் ஜனாதிபதியும் நானும் அடிக்கடி முரண்பட்டுக் கொள்கிறோம். இது புதிய விடயமல்ல.
கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் என்னுடன் முரண்பட்;;ட ஜனாதிபதி காரசாரமான வார்த்தைகளை கூறினார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மறைந்த தலைவர் அஷ்ரப் மட்டுமல்ல நானும் கூட அவருடன் முரண்பட்டிருக்கின்றோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ‘களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேசியப் பட்டியலினூடாக பெற்றுக் கொடுத்துள்ளமைக்கு நன்றிக் கடனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டியது இம்மாவட்ட முஸ்லிம்களின் கடமையாகும்.
இந்த பாணந்துறையைப் பொறுத்தவரை பிரதேச சபையில் வழமையாக சிங்கள பௌத்தர்களே தவிசாளராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தவிசாளராக நியமிக்க எத்தனிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஆகக் கூடிய விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற உறுப்பினரை தவிசாளராக நியமிக்கச் செய்ததன் மூலமும் எமது கட்சி சாதனை ஒன்றை நிலை நாட்டியிருந்தது.
களுத்துறை மாவட்டத்திலும் இந்தத் தேர்தலில் நாம் எமது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதன் பயனாக மாகாண சபையில் முஸ்லிம் உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த மாவட்ட முஸ்லிம்களின் நன்மைக்காக நாம் எடுத்துள்ள முடிவு அரசாங்கத்துடன் எங்களுக்குள்ள உறவில் எந்தப் பாதிப்பை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
களுத்துறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் அதேவேளையில் எமது சமூகத்தின் குரல் இந்த மாகாண சபையில் சுதந்திரமாக ஒலிக்க வேண்டும்.
எமது உறுப்பினராக இருந்து பதவிக்காலம் முடிவில் கட்சி மாறிய தொட்டவத்தையைச் சேர்ந்த ஒருவரை, சந்திரிக்கா பின் கதவால் உள்வாங்கி மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த முன்வந்தபொழுது நாம் அவசர அவசரமாக நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்யும் இறுதி நாளில் களுத்துறை பள்ளிவாசலில் தரையில் அமர்ந்து தனியான வேட்பு மனுவைத் தயாரித்து தாக்கல் செய்ததன் மூலம் எமது பலத்தை நிரூபித்து வெற்றிபெற்று அவருக்கு ஒரு பாடத்தை புகட்டியிருந்தோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடத்திலே இந்த நாட்டில் சமய ரீதியான சகிப்புத் தன்மையற்ற விதத்தில் உருவாகி வரும் வன்முறைப் போக்கை ஒட்டிய புதிய கலாசாரம் பற்றி ஒட்டியெழுந்துள்ள பிரச்சினையை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்து கட்சி என்ற அடிப்படையில் தெரியப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தியதாக அது இருந்தது’ என்றும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பார்த்து உங்களுடைய கட்சிக்காரர்களை கூட்டிக் கொண்டு இன்று வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று கடுந்தொனியில் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.