பாடசாலைக்குச் செல்வதற்காக மஞ்சள் கோட்டுக் கடவையால் வீதியைக் கடக்க முற்பட்ட மாணவனை மோதிய பஸ்ஸொன்று அருகில் இருந்த கடைத்தொகுதிக்குள் புகுந்ததால் 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பளை மத்திய கல்லூரிக்கு முன்பாக நடந்த இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது ;
பாடசாலைக்குச் செல்வதற்காக மஞ்சள் கோட்டுக் கடவையால் கடந்து கொண்டிருந்த மாணவனை வேகமாக வந்த பஸ் மோதியது. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த சாரதி எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் பஸ் அருகில் இருந்த கடைத்தொகுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் ஜெயசிங்கம் திவாகர் (வயது 13) என்ற மாணவன் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் செல்லும் உள்ளூராட்சித் திணைக்களத்துக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 14 பேரில் 6 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் 7 பேர் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுகாயங்களுக்குள்ளான 12 பேரும் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.