சவுதி வாழ் மனிதர் ஒருவர் தனது குடும்பச் செலவுகளுக்காக அங்கிருந்த வயதான பணக்காரர் ஒருவரிடம் சிறுகச் சிறுக கடன் வாங்கியுள்ளார்.
வட்டியும் கட்டாமல் அசலையும் திருப்பித் தராததால் கடன் தொகை சுமார் 30 லட்சம் திர்ஹம்களாக உயர்ந்தது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 50 கோடி.
இதனால் கடன் வாங்கியவர் மீது கடன் கொடுத்தவர் போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டுச் சட்டப்படி கடனைத் திருப்பித் தராவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும்.
எனவே, தன் தந்தை சிறைக்குச் சென்று கஷ்டப்படுவதை விரும்பாத கடன் வாங்கியவரின் 20 வயது மகள் அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார். உடனடியாக, கடன் கொடுத்தவருக்கு போன் செய்த அப்பெண், ‘தன் தந்தை வாங்கிய பணத்திற்கு ஈடாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சியுள்ளார்.
மேலும், தந்தைக்கு அளித்த பணத்தை அந்நாட்டு வழக்கப்படி வரதட்சணையாகக் கொள்ளும் படியும் கூறியுள்ளார். கடன் கொடுத்த முதியவருக்கோ வயது 60. தனக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர் என தன் நிலையை எவ்வளவோ அவர் எடுத்துக் கூறியும் அப்பெண் திருமணத்தில் உறுதியாக இருந்தார்.
அதன்படி, திருமணத்தைப் பதிவு செய்யும் அதிகாரிகளை வீட்டிற்கே வரவழைத்து திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார் அப்பெண். தனது வக்கீலுடன் அப்பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக வந்த முதியவர் தன் தந்தைக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த அப்பெணின் தியாகத்திற்கு அளிக்கும் பரிசாக கடனை தள்ளுபடி செய்த காகிதங்களை அளித்தார்.
மேலும், இது போன்ற முடிவுகளை இனி எடுக்காதே என அப்பெண்ணுக்கு அறிவுரை கூறியதோடு மேலும் 30 லட்சம் திர்ஹாம்களை அப்பெண்ணிற்கு தனது திருமணப் பரிசாக அளித்துச் சென்றார்.