Site icon ilakkiyainfo

அமெரிக்காவின் தீர்மானத்தை தமிழர்கள் விமர்சிக்க வேண்டாமாம்!!: சுமந்திரன் சொல்லுகிறார்

 

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும்  26 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய கனதியானதொன்று என்றும் அதனால் அதனை  தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப்படுத்துவோர் விமர்சிக்க வேண்டாம் என்றும் தமிழ்க் கூட்டமைப்பின்  பேச்சாளரும் எம்.பி.யுமான  எம்.ஏ. சுமந்திரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அமெரிக்க தலைமையில் 6 நாடுகளின் இணை அனுசரணையுடன் சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கும் தீர்மான நகல் வரைபு தொடர்பாக விமர்சனங்கள் அதிகரித்துள்ள   நிலையில்  தமிழ்  மக்களின் பிரதிநிதிகளென அடையாளப்படுத்தும் தரப்பினரின் விமர்சனங்களையிட்டு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் பேரவையின் உறுப்பு  நாடுகள்  மத்தியில் குழப்பம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுமந்திரன் எம்.பி.

இது தொடர்பாக ஜெனீவாவிலிருந்து  தெரிவித்திருப்பதாவது ;

தீர்மானம் தொடர்பாக பல்வேறு சந்திப்புக்கள் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனையனைத்தும்  பயனுடையதாகவே இருக்கின்றன. ஆகையால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும்  அனைத்து தரப்பினருக்கும்  பகிரங்க வேண்டுகோளொன்றை  விடுக்க விரும்புகின்றேன் .

அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம்  தரக் கூடிய முன்னேற்றத்தை தடுக்கும் வகையில்  யாரும்  செயற்படக் கூடாது . ஏனெனில் தீர்மானத்தை கடுமையாக விமர்சனம் செய்து சிலர் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றார்கள். இந்தத் தீர்மானத்தில் பயனில்லை என்றும் வலுவிழந்தது என்றும் இந்த தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு எந்த  நன்மையுமில்லை.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை நிலை  நிறுத்துவதற்கான ஒரு தீர்மானமே தவிர இதனால் தமிழ் மக்களுக்குப் பயனில்லை என்ற கருத்துக்களை எல்லாம்  கூறி வருகின்ற காரணத்தினால் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க விருக்கின்ற நாடுகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி விட்டிருக்கிறது.

இலங்கைப் பிரச்சினை இன்னது தான் என முழுமையாக பிரச்சினையை  அறிந்து கொள்ளாத நாடுகள் இங்கு பலவுள்ளன. அவை எல்லாம் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கவே காத்திருக்கின்றன. அரசாங்கமும் அதே பிரசாரத்தையே செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கமும் விரும்பவில்லை.  தமிழ் மக்களும் விரும்புகின்றார்களில்லை இப்படி இரு பக்கத்தாரும் விரும்பாத ஒரு தீர்மானத்துக்கு நாம் ஏன் ஆதரவு தர வேண்டுமென வாக்களிக்கச் சொல்கிறீர்கள் என பல நாடுகள் எம்மிடம்  சந்தேகம் எழுப்புகின்றன.

இந்த தீர்மானத்தை விமர்சிப்பதன் மூலம்  அரசாங்கத்துக்கு  நன்மை செய்து விடக் கூடாது. அப்படியான கைங்கரியங்களில் ஈடுபட்டால் அது  தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே  இருக்கும். காலம் கனிந்து வருகின்ற நேரத்தில் எதையுமே குழப்பி விடக் கூடாது .

எல்லா விடயங்களுமே படிப்படியாக நடந்தே தீரும். எல்லாம் உடனடியாக  நடக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

காரியம் கனிந்து வருகின்ற நேரத்தில் இப் பழம்  புளிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது . எனவே   வாக்கெடுப்புக்கு விடும் வரை அமைதியையும் பொறுமையையும் காக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன் வடக்கு  முதலமைச்சர்  விக்னேஸ்வரன்  ஆகியோர்  தீர்மானத்துக்கு எல்லோரும் ஆதரவு நல்க வேண்டுமெனவும் இது முன்னேற்றகரமான தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் இருக்கின்றது என்றும் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமே தவிர பயனற்றது என விலத்த முடியாது எனக் கூறியிருந்தார்கள்.

எனவே தான் சர்வதேச  விசாரணை உள்ளடக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்மனத்தை அவசரப்பட்டு பிரயோசனமற்ற தீர்மானம் எனவும் அமெரிக்கா கைவிட்டு விட்டது.

சர்வதேசம் ஏமாற்றி விட்டது என்று ஆதரிக்கும் நாடுகளுக்கு சலிப்பு ஏற்படும் வண்ணம் விமர்சனம் செய்யக் கூடாது என எதிர்பார்க்கின்றோம.

இம்முறை  ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ் தானிகர்   நவநீதம் பிள்ளையின் பொறுப்பில் மேற்படி விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அது சர்வதேச சுயாதீன விசாரணையாகவே இருக்கும் அமெரிக்க வரைபு எங்கள் கையில் வந்தவுடன் அதன் நகலைப் பார்த்தோம் .

இரண்டு இடங்களில் சர்வதேச விசாரணை பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐவரிகோஸ்ட் டிலும் சிரியாவிலும் இப்படியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்பே சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனபடியால் இதற்கு முன் உதாரணங்களும் இருக்கின்றன.

ஆரம்பத்தில் நாம் அமெரிக்காவுடன் கதைத்த போது எப்படியான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கேள்வி எழுந்த போது தீர்மானத்தில் சர்வதேச விசாரணையென்ற வசனத்தைப் பாவித்தால் பல  நாடுகள் அதற்கு ஆதரவு வழங்க  தயங்கும் என்று தீர்மானம் வெற்றி பெறுவதற்கும்  தேவையான வாக்குகளைப் பெறுவது கஷ்டமாக இருக்கும் என்றும் அதனால் தான்  ஐவரிகோஸ்ட்டிலும் சிரியாவிலும் நடைபெற்ற முன்னுதாரணங்களை எடுத்துக்காட்டியிருந்ததோம்.

இவ்விதமாக தீர்மானத்தை நிறைவேற்றினால் தேவையான ஆதரவை ஜெனீவாவில் பெற முடியுமெனத் தெரிந்த பின்பு தான் எமது சிபார்சுகளை முன்வைத்தோம் அமெரிக்காவும் பல நாடுகளுடன் கலந்தாலோசனை செய்த பின்பு இந்த முடிவுக்கு வந்தது.

தீர்மானத்தில் சர்வதேச விசாரணையென்ற வார்த்தை பாவிக்கப்பட்டால் அதற்கு சரியான வியாக்கியானத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும் எப்படியான விசாரணை செய்யப்பட வேண்டும். அந்த விசாரணைக் குழுவுக்கான அதிகாரம் என்ன ? என்ற விடயங்கள் எல்லாம் அந்த தீர்மானத்தில் சொல்லப்பட வேண்டும் .

அதற்குரிய வாக்கு பெறப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் குறைந்த அதிகாரங்களைப் பாவிக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும்.  இவை  எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே சர்வதேச  நாடுகளின் வாக்குப் பலத்துடன்  நிறைவேற்றப்பட வேண்டுமென்ற காரணத்தின் அடிப்படையில் ஜெனீவா மனித உரிமையாளரை  தலைவராகக் கொண்ட ஒரு ஆணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் .

அவரே என்ன மாதிரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்  ? விசாரணைக் குழுவுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற இறுதி முடிவை எடுக்கக் கூடிய  அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே தான் சர்வதேச விசாரணையென்ற விடயத்தை   விட  மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் தலைமையிலான  விசாரணை சிறப்பானதாகவும் காத்திரமானதாகவும் இருக்குமென்ற நம்பிக்கையின் பேரில் நாங்கள் சில திருத்தங்களை நகலில் முன்வைத்தோம்.

அதாவது  நவநீதம் பிள்ளை இந்த தீர்மானத்தின் மூலம் சர்வதேச சுயாதீனமான விசாரணையை நடத்துவதற்கான அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழாமல் அவரே தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில்  தரப்பட்ட நகலில் பழைய முன் உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சில சொற்பதங்களை மாற்றிக் கேட்டிருக்கின்றோம்.

ஆனபடியால் திருத்தமென்று நாம் கூறுவது அப்படியான திருத்தங்களே தவிர வேறு ஒரு அர்த்தமும் இல்லை.
மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின்  அதிகாரத்தை ஒருவரும் கேள்விக்கு உட்படுத்தாத வகையில் விரிவான ஒரு தீர்மானமாக இருக்கலாமென்ற சொற்பதங்களை நாங்கள் உண்டாக்கி இருக்கின்றோம்.

அந்த சின்னச் சின்ன திருத்தங்களையே அமெரிக்கா  தனது நகலில் செய்து கொண்டிருக்கிறது. அந்த திருத்தங்கள் வருகின்ற  போது மேற்படி தீர்மானம் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் . ஆகையினால் தான் அந்த  வேலையைச் செய்வதற்காக மீண்டும் நான் ஜெனீவாவுக்கு வந்துள்ளேன்.

தீர்மான வரைபில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் சட்ட நுணுக்கம் கொண்டவை. ஒவ்வொரு சொல்லுக்கும் சர்வதேச சட்டத்தில் வரைவிலக்கணம் இருக்கும் .

சாதாரண மொழியில் பாவிக்கும் வார்த்தைகள்  போல அல்லாது, சட்டத்தில் அந்த வார்த்தைகளுக்கு விசேட கருத்துகள் தரப்படலாம்.  அவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்ற விதத்தில் தீர்மானத்தை முன்னெடுப்பதற்காகவே நான் மீண்டும் ஜெனீவாவுக்கு  வரவேண்டி யிருந்தது என்று குறிப்பிட்டார்.

அவரின் அரசியல் தீர்வு பற்றிய முன்னெடுப்புக்கள் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளதா என வினவிய போது ஒரு நாடு இன்னுமொரு நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் அமைப்பாக ஜெனீவா  மனித உரிமைப் பேரவை அமைக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாடும்  தன்னுடைய  சுயாதீனத்தையும் இறைமையையும் இழந்து விடக் கூடாது என நினைப்பவர்கள்  இந்த அமைப்பினர் .

அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் இலங்கைக்கு நன்மை கொண்டு வரும்  தீர்மானமாகவே கருத வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று கருதினால் அது தவறான கருத்தாகும்.

நாங்களும் இலங்கைக்கு நன்மையைக்  கொண்டு வரவே நினைக்கின்றோம். குற்றங்கள் தண்டிக்கப்பட  வேண்டும் . அவ்வாறு இல்லையாயின் அது ஒரு நல்ல நாடு இல்லை. ஏதாவது நடந்தால் நடத்தப்பட்டால் அதற்கான விளைவை நாம் அனுபவித்துத் தான் ஆ க வேண்டும்.

நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும் . அந்த கோணத்தில் தான் சர்வதேச நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு வருகிறோம்.

விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவது இலங்கைக்கு நல்ல விடயமாகவே அமையப் போகிறது என்பது விளங்க வைக்கப்பட வேண்டும். ஆனபடியால் தான் அந்தக் கோணத்திலிருந்து ஒருநல்ல செய்தியாக அறிக்கை சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் நடைபெற்ற குற்றங்களை மூடி மறைக்க முடியாது. அது வெளிக் கொண்டு வரப்பட்டு அதற்கான சரிய õன அணுகு முறையைக் கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டு உண்மையின் அடிப்படையில்  மக்களின் நலனும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படுவதே சரியான நல்லிணக்கமாக அமைய முடியும் .

இந்த  எதிர்பார்ப்பை தமிழ் மக்கள் அடைய வேண்டுமானால் பொறுமையுடனும் கவனமாகவும் செயற்பட வேண்டுமென நினைக்கின்றேன் என அவர் கூறினார்.

Exit mobile version