பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.
மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான ‘வடக்கின் பெருஞ் சமர்” என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவர் மீது தாக்குதல்: ‘வடக்கின் மாபெரும் போர்” தற்காலிகமாக இடைநிறுத்தம்
15-03-2014
வடக்கின் மாபெரும் போர் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் துடுப்பாட்ட போட்டி ரசிகர்களின் தவறான நடத்தை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வரும் வடக்கின் மாபெரும் போர் என்று வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டியில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், நடுவர் கொடுத்த ஆட்டமிழப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக நடுவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் நடுவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் பி.துவாரகசீலன் முன்னே சென்று துடுப்பெடுத்தாட எத்தணித்த தருணத்தில் அதனை விக்கெட் காப்பாளர் ஸ்டம் செய்தார்.
இவ்வேளை விக்கெட்களின் பேல்ஸ் கட்டைகள் இருந்த இடத்தில் அப்படியே நின்றன. இது கிரிக்கெட் நியதிக்கமைய ஆட்டமிழப்பில்லை. இருந்தும் இரண்டாவது நடுவர் ஆட்டமிழப்பினை வழங்க சென்.ஜோன்ஸ் அணித்தலைவர் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
இருந்தும், பிரதான நடுவர் (மெயின் அம்பியர்) அதனை ஆட்டமிழப்பு இல்லையென்று துடுப்பாட்ட வீரரை மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்தார். இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நடுவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டுள்ளார்.