கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை, இந்தியாவிலிருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மீனவ மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய, கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என போற்றப்படுகின்ற கச்சதீவுக்கு இம்முறை தமிழகத்திலிருந்து 95 வள்ளங்களில் 3128 பேரும் இலங்கையிலிருந்து 89 வள்ளங்களில் 2151 பேரும் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தனர்.
இலங்கை சார்பில் நெடுந்தீவு பங்கு தந்தை அருட்தந்தை அமல்ராஜ் ஞானபிரகாசம் அடிகளாரும் இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் பங்குத் தந்தை அருட்திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர்.
நேற்று நடைபெற்ற திருப்பலி பூஜையில் கடற்படைத் தளபதி வைஸ். அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, இராணுவத் தளபதி லெப்டினன் கேணல் தயாரட்நாயக்க ஆகியோர் முதற் தடவையாக கலந்துகொண்டனர்.
இவர்களுடன் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேரா, இலங்கை கரையோர பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் ரவி உதய குணரட்ன, யாழ். நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஆர்.ரவீந்திர ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
காங்கேசன்துறையிலிருந்து சுமார் 45 கடல் மைல் தொலைவில் (82 கிலோ மீற்றர்) இந்து சமுத்திரத்தில் சுமார் 285 ஏக்கர் பரப்பளவை கொண்ட கச்சதீவு, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு சொந்தமாகியது.
சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளதுடன் யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதியின் கண்காணிப்பின் கீழ் கச்சதீவு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து வரும் அடியார்கள் ஆலய வழிபாட்டிற்கு கடலில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்ததால் கடற்படையினரின் உயிர் காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்களின் பாதுகாப்புக்காக பெருந்தொகையான படையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குடிநீர் வசதிகள், மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததனால் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது.
தீவுக்கு வந்துள்ள 5 ஆயிரத்து 279 பேருக்கும் மூன்று வேளை உணவு கடற்படையினரால் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை பகுதிகளிலிருந்து சுமார் 200 இற்கும் அதிகமான அருட் சகோதரிகளும் அருட் தந்தைகளும் வருகை தந்திருந்தனர். இவர்கள் தங்குவதற்கு தனித்தனியான தற்காலிக கொட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன.
வருடத்தில் ஒரு நாள் வரும் இந்த கச்சதீவு உற்சவம் தமிழகம் மற்றும் இலங்கை உறவை மென்மேலும் வலுப்படுத்துமென்று கூறிய கடற்படைத் தளபதி, இதனை வலியுறுத்தும் வகையில் தமிழக மீனவர் ஒருவருக்கு தேவாலய முன்றலில் வைத்து மீன்பிடி வலைகளை கையளித்தார்.
கச்சத்தீவு நுழைவாயில்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா பாதுகாப்பிற்காக வந்த இந்திய கடலோர காவல்படையின் கப்பல்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா பாதுகாப்பிற்காக வந்த இந்திய கடலோர காவல்படையின் கப்பல்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு வருகை தரும் இந்திய பக்தர்களை வரவேற்கும் பதாகை
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு வருகை தந்த இந்திய – இலங்கை இரு நாட்டு பக்தர்கள்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் உள்ள தோற்றம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வெளியே உள்ள தோற்றம்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி பூஜை நடத்திய இந்திய – இலங்கை இரு நாட்டு பாதிரியார்கள்.
கச்சத்தீவில் ஸ்டால்கள் அமைத்திருந்த நெடுந்தீவு சிறுவியாபாரிகள்