காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் ஒருவரின் காணியில் சடலத்தை அடக்கம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பதற்ற நிலை பொலிஸாரின் தலையீட்டையடுத்து சமுக நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
இதுபற்றி தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமென கூறப்படும் காணி ஒன்றில் கோவில்குளம் பகுதியில் மரணித்த ஒரிவரின் சடலம் ஒன்றினை அடக்கம் செய்யவதற்கு சிலர் முற்பட்டனர்.
தனியாருக்குச் சொந்தமான காணியில் அடக்கம் செய்தால் அங்கு சமூகப் பிரச்சினை ஏற்படும் எனத் தெரிவித்து இவ்விடயம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் குறித்த சடலத்தை தனியாருக்குச் சொந்தமான காணியில் அடக்கம் செய்யாமல் சேமக்காலையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக எதிர்வரும் 25 ஆம்திகதி குறித்த காணி சொந்தக்காரரையும் சடலத்தை கொண்டு வந்த இருவரையும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தின் போது ஸ்தலத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான லால் செனவிரத்ன, ஜெயந்த ரத்நாயக்க, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.ரி.ரணசிங்க ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டு வந்தனர்.